முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓவம்மா #4 (தொடர்கதை)

முந்தைய பகுதிகள்:

ஓவம்மா! #1 | #2 | #3

அக்கா அன்னிக்கு ஊருக்குப் போய்ட்டா, ஏதோ கல்யாண வீடுன்னு சொல்லி. சோறு பொங்கச் சொன்னா என்ன. வீட்டப் பாத்துக்கோ, மாமா இருப்பாரு தொணைக்குனு சொல்லிட்டு.


எனக்கு அவ்வளவு சந்தோஷம் அக்கா ஊருக்குப் போனது. என் விருப்பம் போல அன்னிக்கி பொழுதக் கழிக்கலாம்னு நெனச்சேன்.

ஆனாலும் அப்படி முடியாது, கண்டிப்பா வேலைக்கு போயே தீரனும். போனேன். ஆனா, வேலைக்கு நடுவுல அக்கா முதுகுல ஓங்கி எத்துவாலேன்ற கவல இல்லாம, நிம்மதியா கத பேசிக்கிட்டே வேல பாத்தேன்.

சாயந்தரம் வீட்டுக்குப் போனேன், காலேல பொங்குன சோறு தான் இருந்துச்சி, எனக்கு முட்ட சாப்டனும்னு ஆசையா இருக்க, அன்னிக்கி சம்பளக் காசுல, ஒரு முட்ட வாங்கி, பொரிச்சுத் தின்னேன். கொஞ்சம் கருப்பட்டி மிட்டாயும் வாங்கித் தின்னேன்.

தெரியும் எனக்கு, ஊருக்குப் போன அக்கா வந்தா, "ஏண்டி சம்பளக் காச வாங்கித் தின்ன"னு அடிப்பானு. ஆனாலும், அடி தானனு வாங்கித் தின்னுட்டேன்.

அடி வாங்கி வாங்கி, பன்னெண்டு வயசுல, எனக்கு மரத்துப் போய் இருந்தது.
அடிக்கு பயமே இல்லாமப் போய் இருந்தது. எங்கக்கா பொம்பள தான், ஆனா என்ன அடிக்கிறப்போ, மிதிக்கிறப்போ, அவளுக்கு பொம்பளப் பிள்ளைய அடிக்கிறோமேன்னு தோனவே தோனாது. கண்ணா மூடிட்டு எங்க வேணாலும் மிதிப்பா.

அன்னிக்கி ராத்திரி, தூங்கிட்டு இருந்தேன், திடிர்னு ஏதோ யாரோ கிட்ட வராப்ள தோன, டக்குனு முழிச்சிட்டேன்.

என் மாமா... தொணையா இருப்பாரு னு சொல்லிட்டுப் போனா எங்கக்கா, ஆனா அவரே தான் அன்னைக்கு வெனையாப் போனாரு.


எனக்கு அப்போ வெவரம் தெரியாது, ஆனாலும் எங்க மாமா, சீ, அவனுக்கு என்ன மரியாத, நாய், அப்படிச் சொன்னாக் கூட தப்பு, நாய் நன்றி உள்ளது! ஓநாய்.. . சின்னப் பிள்ளையைக் கூட, காமத்தோட பாக்குற ஓநாய், எனக்கு பன்னெண்டு வயசு தான், ஆனாலும் உணர முடிஞ்சுது, ஏதோ இது தப்புன்னு. அந்தத் தொடுதல் தப்புன்னு.

அந்த ஓநாய் கிட்ட வரும் போதே, தள்ளிப் போனேன், விடல, மேல மேல தப்பா நடக்க முயற்சி பண்ணுச்சு, போட்டேன், ஒரே போடாப் போட்டேன், பக்கத்துல இருந்த படிக்கல்லத் தூக்கி, ரெத்தம் கொட்டுச்சு, அலறுச்சு, இருட்டுல கத்துச்சு, ஏதோ தப்பிச்சோம்னு, ஓடிட்டேன், வீட்ட விட்டு ஓடிட்டேன்.

இனியும் வீட்ல இருந்தா, என்னால இருக்க முடியாது, நல்லது இல்லன்னு தோனுச்சு, கைல அன்னிக்கு வாங்குன சம்பளக் காசு இருந்துச்சு, அத தூக்கிட்டு ஓடிட்டேன் எங்க அக்கா வீட்ட விட்டு.

வெளிய வந்துட்டேன், இருட்டு, ராத்திரி நேரம், என்ன செய்ய, எங்க போகனு தெரியாம, நடந்தேன், நடந்து போயிட்டே இருந்தேன், எங்க போறதுனே தெரியாம.

அன்னிக்கு தெருவுல நடந்து போனப்போ, பேசுனேன், " அப்பா.. ஏன்பா என்ன விட்டுப் போனீங்க...? எனக்கு இங்க யாருமே இல்லப்பா.. எங்கப்பா போவேன்... யாரப்பா பாப்பேன்.." நடு ரோட்ல ராத்திரி இருட்டுல அன்னிக்கி நான் பயந்து பயந்து, சோகத்தோட அழுது பொலம்புனது, யாருமே இல்ல னு நெனைக்கிறப்போ இருந்த அந்த வலி, அது கொடுமையானது.

என்ன நானே தான் காப்பாத்திக்கணும், ஓடுனேன், எங்க போறதுன்னு தெரியாம.

நடந்துக்கிட்டே இருந்தேன், ஒரு கோயில் இருந்தது, சின்னக் கோயில், யாரும் அத மூட்றது இல்ல போல, எனக்கும் தெரு நாய்களுக்கும் அது தான் அடைக்கலமா இருந்தது! உள்ள போனேன், ஒரு ஓரமா உக்காந்தேன், நடந்து நடந்து கால அப்படி வலிச்சது. தூக்கம் வந்தது அசதியில, ஆனா, பயமா இருந்தது, இங்கயும் யாராவது வந்துடுவாங்கலோனு, பயமா இருந்தது.

எங்க போறதுன்னு தெரியாம, தூங்காம, ராத்திரி முழுக்க அழுதேன், அழுதுக்கிட்டே இருந்தேன், நான் அழுத அளவு, யாரும் அழுதிருப்பாங்கலானு தெரியல.

அப்பா அம்மா இல்லாம, ஒரு பொண்ணு வளர்றது, சாபம்!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...