திங்கள், மே 13, 2013

ஆங்கில வழிக் கல்வியா? இல்லை தமிழா? எது சிறந்தது?

18 கருத்துகள்:
இன்று ஒரு பதிவு படித்தேன். ஆங்கில வழிக் கல்வியா இல்லை தமிழ் வழிக் கல்வியா எது சிறந்தது என்று. இதோ "இங்கு".
English or Tamil?

ஆங்கிலம் படிக்க விருப்பம் இருப்பவர்கள் மட்டும் படிக்கட்டும். உண்மை, நான் பொறியியல் மாணவி. சிறுவயதில் இருந்து ஆங்கில வழிக் கல்வி தான் கற்றேன். மூன்று பள்ளிகளில் படித்திருக்கிறேன். அதில் சிறுவயதில் படித்த பள்ளி ஆங்கில வழிக் கல்வி தரும் பள்ளி தான் என்ற போதிலும், அங்கு படித்தவரை எனக்கு ஆங்கிலம் பேச வராது! படித்து பரிட்சையில் எழுதி முதல் மதிப்பெண் வாங்கி விடுவேன் ஆனால். பிறகு ஒரு பள்ளிக்கு மாற்றினார்கள் அப்பாவிற்கு வேலை மாற்றம் ஆனபோது. அந்தப் பள்ளியில் ஆங்கிலத்தில் மட்டும் தான் பேச வேண்டும். அங்கு சென்று ஒரு மாதம் கடினமாக இருந்தது. பிறகு ஆங்கிலம் பேசப் பழகிவிட்டேன். அடுத்து பயின்ற பள்ளியும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளி, அங்கும் ஆங்கிலம் தான் பேசினார்கள். அங்கும் என்னால் பேச முடிந்தது. நான் ஆங்கில வழிக் கல்வியே சிறுவயதில் இருந்து படித்ததால், எனக்கு சிறுவயதில் ஆங்கிலம் பேச வராத போதிலும், நடுவில் பேசியே ஆக வேண்டும் என்ற நிபந்தனை வந்த போது, கொஞ்சம் கடினமாக இருந்த போதிலும், பேசிவிட்டேன், அடிப்படையில் நிறைய ஆங்கிலத்தில் எழுதி பழக்கம் இருந்ததால்.

ஆனால், இன்று நான் பொறியியல் படிக்கிறேன். என்னுடன் நிறைய பிள்ளைகள் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி கற்றவர்கள் படிக்கிறார்கள், அவர்களில் பலர் ஆங்கில வழியில் படிக்க மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதில் வெகு சிலரே ஆங்கிலத்தில் பயில பழகி இருக்கிறார்கள். 

என் தோழி ஒருத்தி, பள்ளியில் நிறைய மதிப்பெண்கள் பெற்று பொறியியல் சேர்ந்தவள், சிறுவயதில் இருந்து அவளது பள்ளியில் அவள் தான் முதல் மதிப்பெண். ஆனால், தமிழ் வழிக் கல்வி பயின்றவள். இப்போது கல்லூரியில் வந்து எல்லாம் ஆங்கிலம் என்றதும், அவளுக்குக் கடினமாக இருக்கிறது. இதுவரை முதல் மதிப்பெண் மட்டுமே வாங்கிப் பழகியவளுக்கு, இங்கு வந்து ஆங்கிலம் என்ற காரணத்தால் அவளது மதிப்பெண் குறைந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

அவளது தன்னம்பிக்கை சுத்தமாக இப்போது அடிபட்டுவிட்டது. அவள் படிப்பதற்கே தகுதி அற்றவள் என்பது போல நினைக்கத் தொடங்கிவிட்டாள். மேல் படிப்புப் படிக்கலாம், வேலைக்குச் செல்லலாம் என்று பள்ளியில் படிக்கும் போது நம்பிக்கையோடு இருந்தவள், இப்போது இந்த நான்கு ஆண்டுகள் மட்டும் போதும், எனக்கு படிப்பே வரவில்லை என்று சொல்கிறாள்.

காரணம், ஆங்கிலம், இதே பாடத்தைத் அவள் இப்போது தமிழில் படித்திருந்தால், உறுதியாகச் சொல்ல முடியும் என்னால், அவள் முதல் மதிப்பெண் இப்போதும் பெறமுடியும் என்று. 

இங்கு எனக்குத் தெரிந்து, ஆங்கில வழிக் கல்வி, தமிழ் வழிக் கல்வி எது வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், சிறுவயதில் இருந்தே ஆங்கில வழிக் கல்வி என்றால் ஆங்கில வழிக் கல்வி. தமிழ் என்றால் இறுதி வரை தமிழிலேயே படிக்கலாம். நடுவில் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கோ, ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கோ மாறும் போது தான் பிரச்சனை வருகிறது என்பது எனது கருத்து. 

உதாரணமாக இப்போது என்னை தமிழில் பொறியியல் படிக்கச் சொன்னால், எனக்குக் கடினமாக இருக்கும். ஆனால், என்னால் படிக்க முடியும், காரணம் தமிழ் என் தாய் மொழி. இதுவே, தமிழ் வழிக் கல்வி பயின்ற ஒரு மாணவரால், இதே போல ஆங்கிலவழியில் படிக்க இயலுமா என்பது சிறிது சந்தேகம் தான். ஆனால், பழகப் பழக வந்துவிடும். ஆனால், பழகும் வரை பலரும் தாக்குப் பிடிப்பதில்லை என்பது தான் இங்கு பிரச்சனை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

என்னையும் நேசிக்க!

8 கருத்துகள்:
இங்கு நீளமாக இருக்கும்
இரவுகளுக்குக் காரணம்
இதோ நீ தான்!

தனியே இதை,
எனக்கு விதித்தது,
இதோ நீ தான்!

நாளை இதே போலவா?
வேண்டாம் எனக்கு!

இந்தத் தனிமையும்,
உந்தன் இனிமை
இல்லாத வெறுமையும்!

இது போல 
இன்னும் ஒருநாளா?
வேண்டாம் அது எனக்கு!

உன்னைத் தவிர,
யாரும் வேண்டாம்!
மீண்டும் ஒருமுறை,
ரணமும் வேண்டாம்!

ஆனாலும் வேண்டும்,
என்னை நேசிக்க,
என் கை கோர்க்க,
எனக்கென ஒருவன்,
ஆனாலும் வேண்டும்,
என் கண்ணீர் துடைத்து,
கட்டி அணைத்து,
ஆறுதல் சொல்ல!

வேறு எதுவும் வேண்டாம்,
என்னைத் தாங்க,
எனக்கும் வேண்டும்,
என்னை நேசிக்க,
எனக்கென ஒருவன்!

இப்படியும் என் வாழ்க்கை,
இறுதி அடையுமா?
எதுவுமே புரியாமல்,
இப்படியே என் வாழ்க்கை
இறந்துவிடுமா?

உயிருள்ளவரை உண்மையாய்
இருந்துவிட,
உயிர்விடும் வரை,
எல்லாம் பகிர்ந்துகொள்ள!

வேறு எதுவும் வேண்டாம்,
என்னைத் தாங்க,
எனக்கும் வேண்டும்,
என்னை நேசிக்க,
எனக்கென ஒருவன்!

இன்று இருக்கும்,
வேதனையும் பயமும்
துக்கமும் அழுகையும்
என்றும் வேண்டாம்!

இதை மாற்ற,
என்னைத் தாங்க,
எனக்கும் வேண்டும்,
என்னை நேசிக்க,
எனக்கென ஒருவன்!

உனக்காகத் தந்திட,
உள்ளது என்னிடம்,
ஏராளம் ஏராளம்!
எனக்கு வேண்டியதெல்லாம்,
என் கண்ணீர் துடைக்க,
காயங்கள் மறைக்க,
எனக்கென ஒருவன்,
என்னை நேசிக்க,
எனக்கென ஒருவன்!

$$$$$$$$$$$$$$$$$$$$$$

"Somebody to love me" என ஒரு ஆங்கிலப் பாடலைக் கேட்டேன், வயதுக் கோளாறு என்பார்களே அது இது தான், எழுதிவிட்டேன்! :) 

குண்டு!

12 கருத்துகள்:
குண்டா? அட, இது நீங்கள் நினைப்பது போல உடல் பருமன் குறித்த பதிவு அல்ல!.

இது தத்துவம் அல்லது, உண்மை, அல்லது, ஒருவரின் கருத்து என்று கூட வைத்துக் கொள்ளலாம்! ஆம், இது ஒருவரின் கருத்து தான்.

ஒருவர் என்றால் யாராக இருக்கும்? வழக்கம் போல, என் அப்பாக்குட்டி (அப்பா) தான். என்னிடம் அவரைத் தவிர்த்து வேறு யார் கருத்து சொல்வார்கள்?

ஏதோ ஆர்வமாக என் அப்பாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன். திடீரென்று ஏதேதோ பேசி, எனக்கும் என் தம்பிக்கும் இருக்கும் சுதந்திரம், அதில் இருக்கும் வேறுபாடு என்று பேச்சு வந்தது.

"எப்பவும் அவன் தான் சுதந்திரமா இருக்கான், என்ன சுதந்திரமா விடவே மாட்டிக்கிறீங்க", இப்படி நான் எப்போதும் போலவே குறைபட்டுக் கொள்ள, என் அப்பா அப்போது தான், இந்த "குண்டு" கருத்தை, கதையைச்  சொன்னார்.

குண்டா? ஆம் குண்டு! சரி, என்னவென்று அதிகம் யோசிக்காதீர்கள், நானே சொல்கிறேன்.

என் அப்பாவுக்கு நான் ஆண் பிள்ளையாகப் பிறக்கவில்லையே என்று வருத்தமாம். உடனே தவறாக நினைக்காதீர்கள், நான் பெண் பிள்ளை என்பதால் வெளியே என்னைத் தனியே அனுப்ப அப்பாவுக்குக் கொஞ்சம் பயம், கொஞ்சம் என்ன, நிறையவே எனலாம்.

நான் வேறு சும்மா இருக்கமாட்டேன், அந்தக் கல்லூரியில் அது நடக்கிறது, இந்தக் கல்லூரியில் இது நடக்கிறது என்று ஏதாவது போட்டியில் கலந்து கொள்ள போயே தீருவேன் என்று நிற்பேன்.

அது ஏனோ, வெளியே தனியே அனுப்பினால், என்னை காக்கா தூக்கிச் சென்று விடுமோ, என்று ஒரு பயம் அவருக்கு! ஆனாலும், இப்போதெல்லாம் கொஞ்சம் அனுப்புகிறார், நான் கொஞ்சம் பெரிய பெண் ஆனதால், என்னால் எதையும் சமாளிக்க முடியும் என்று தோன்றிவிட்டது போலும்! :)

என்ன தான் அப்பா நான் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் சொல்கிறார்கள் என்றாலும், எனக்கு ஒரே வருத்தாம், இல்லை, கோபம் என்றே சொல்லலாம்.

"அதென்னப்பா, நான் பொண்ணா இருக்கதால இப்போ என்னவாம்? என்னாலையும் வெளில தனியா பத்ரமா போயிட்டு வர முடியும், நாலு எடத்துக்கு போனா தான் நெறைய தெரிஞ்சுக்க முடியும், பையன்னா என்ன, பொண்ணுனா என்ன?", இப்படி நான் அப்பாவிடம் பேசும் போது கொஞ்சம் குரலை உயர்த்தியே கேட்டுவிட்டேன்.

அப்பா உடனே "இரு சொல்றேன்", என்று ஒரு கதை சொன்னார்கள்! இல்லை தத்துவம் எனலாம் அதை.

ஆண் பிள்ளை இரும்பு குண்டு போல, எங்கு போனாலும் எதில் இடித்தாலும் தாங்கிக் கொள்ளும். பெண் பிள்ளை கண்ணாடி குண்டு போல, எளிதில் உடைந்துவிடும் - இப்படிச் சொன்னார்.

நான் எப்படிப் பட்ட ஆள், அதெப்படி ஒத்துக்கொள்ள முடியும்? உடனே நான் சொன்னேன், "போங்கப்பா எப்பபாரு என்னால தனியா போக முடியாது, வர முடியாதுனே சொல்றது, அதுக்கு ஒரு குண்டு வேற" இப்படிச் சொன்னேன்.

ஏன், பொண்ணு இரும்பு, பையன் கண்ணாடினு சொல்ல வேண்டியது தான. இப்படி என்னென்னவோ பேசினேன்.

உடனே அப்பா சொன்னார், "சரி நைட் ஒரு மணிக்கு அந்த பிள்ளையார் கோவில்ல இருந்து வீட்டுக்குத் தனியா வந்துடுவியா?" இப்படிக் கேட்டார்.

"ம்ம் வந்துடுவேனே, நீங்க தான் விடமாட்டிங்க", இப்படிச் சொன்னேன் நான்.

நீ வருவேன்னு தான் சொல்லுவ, ஆனா, அங்க அந்த ரெட்டப் பாலத்தத் தாண்டுறப்போ நாலு பேரு வந்து வழி மறச்சா என்ன செய்வ? - இப்படிக் கேட்டார் அப்பா.

"ரெட்டப் பாலமா...?", அப்போது தான் புரிந்தது, அப்பா வீட்டை விட்டு தூரமாக இருக்கும் பிள்ளையார் கோவிலை சொல்லி இருந்தார் என்பது, நான் பிள்ளையார் கோவில் என்றதும் என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் மரத்தடிப் பிள்ளையாரை நினைத்துவிட்டேன் :P

"ஒ.. அந்தப் பிள்ளையார் கோவில சொன்னிங்களா.. நான் நம்ம காலனி பிள்ளையார நெனச்சுட்டேன். அது, அதெல்லாம் எந்தப் பிள்ளையார் கோவில்னாலும் நான் வந்துடுவேன்." என்று சொன்னேன், ஆனால் உண்மையில் வர முடியுமா, யாராவது வழி மறித்தால் என்ன செய்வேன் என்பதெல்லாம் யாருக்கு வெளிச்சமோ!

உடனே அப்பா சொன்னார் இப்படி.

அதே இரவு ஒரு மணிக்கு என் தம்பி அந்தப் பாலத்தைக் கடந்து வந்தால், அங்கு அமர்ந்திருக்கும் சாமியார் அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு தியானத்தைத் தொடர்வாராம்.

அதே, நான் அந்த வழியில் வந்தால், சாமியார் பெரிய கொள்ளைக் காரனாக தீயவனாக மாறி வந்து என்னை மிரட்டுவாராம்! காரணம் நான் பெண்ணாம்!

இப்படிச் சொன்னதும், "சரிப்பா நான் எங்கயும் போகல தனியா, நீங்க வாங்க கூட", என்று சொல்லி பேச்சை முடித்துவிட்டேன்.

அப்பா சொல்வதெல்லாம் உண்மை தான். ஆனாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யாரால் தான் ஏற்றுக் கொள்ள முடியும், "நீ வலிமை இல்லாதவன்" என்று சொன்னால்? உங்களால் முடியுமா என்ன?

உண்மை சில சமயம் அதிகம் கசக்கும் தான் போல! நான் பெண்! பல வகையிலும் நான் பெண் என்பதற்கு பெருமைப்பட்டாலும், சில நேரங்களில் வருத்தம் தான்!

பெண்மை போற்றுவோம்! :P :P


சனி, மே 11, 2013

நினைவெல்லாம் நீதானே!

8 கருத்துகள்:
அன்னையர் தினம்! (mother's day)


எனக்கு விபரம் தெரிந்ததாக நினைவு,
நீ ஒரு புளிப்பு மிட்டாய் வாங்கி,
பாதி கடித்து,
மீதி தந்தாயே,
அன்று தான் எனக்கு விபரம் தெரிந்ததாக நினைவு!

நீ என்னை முத்தமிட்டதாய் நினைவு,
ராணி வேடமிட்டு நாடகத்தில்,
மிடுக்காய் பேசி முடித்தவுடன்,
முதல் முதலாய்,
அன்று தான் நீ முத்தமிட்டாய் நினைவு!

அழகை உணர்ந்ததாய் நினைவு,
எனக்காக நீ சமைத்து விட்டு,
முகமெல்லாம் கரியைப்
பூசிக்கொண்டு நின்றாயே,
அன்று தான் அழகை உணர்ந்ததாய் நினைவு!

மழையை ரசித்ததாய் நினைவு,
வீட்டின் சாளரத்தின் வழியே,
என் காதோடு நீ பாடிய,
மழைப் பாடலைக் கேட்டுக் கொண்டே,
என்றோ நான் மழையை ரசித்ததாய் நினைவு!

கடவுளை நம்பியதாய்  நினைவு,
எனக்குக் காய்ச்சல் என்று,
நீ மண்சோறு சாப்பிட்டபோது,
என்னையும் அறியாமல், கடவுளை நம்பியதாய் நினைவு!

பயத்தைக் கலைந்ததாய் நினைவு,
"பயப்படக் கூடாது", உன் கருவறையில்,
நான் இருந்த போது,
நீ சொன்னதும்,
நான் என் பயத்தை எல்லாம் கலைந்ததாய் நினைவு!

என்றும், என் மீது உயிராக இருக்கும்,
"ஒன்றும் கவலை இல்லை", என்னைத் தாங்கிப் பிடிக்கும்,
என் அம்மா, என் நினைவெல்லாம் நீ தானே!

#அன்னையர் தின வாழ்த்துக்கள்!


செவ்வாய், மே 07, 2013

பழைய சாதமும் பாயாசமும்!

7 கருத்துகள்:
உங்களுக்கு நல்ல பசி! காலையில் இருந்து சாப்பிடவே இல்லை! நல்ல வேலை, நேரம் இப்போது மதியம் மூன்று மணி என்று வைத்துக் கொள்ளுங்கள்!

சாப்பிட, பழைய சாதம் வேண்டுமா? அல்லது, பாயாசம் சேர்த்து இருக்கும் அறுசுவை சாப்பாடு வேண்டுமா என்று கேட்டால், எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

பெரும்பாலானோர் அறுசுவை உணவு தான் என்பார்கள், ஆனால், என்னைக் கேட்டால், பழைய சாதம் தான் வேண்டும் என்பேன்!!

ஆனால், ஒரே ஒரு நிபந்தனை, அந்த பழைய சாதம் என் அம்மா கையால் செய்ததாக இருக்க வேண்டும்!

இப்படி எல்லாம் நான் சமீப காலமாக யோசிக்கத் தொடங்கிவிட்டேன், அதுவும், அதிகம் சாப்பாடு குறித்தே இருக்கின்றன யோசனைகள் எல்லாம்!

அடடே என்ன ஆயிற்று கண்மணிக்கு? பயப்படாதீர்கள், "வெயில் அதிகமானதால் ஒருவேளை மூளை கலங்கிவிட்டதோ எனக்கு?", என்று!

காரணம், விடுதியில் இருந்தது தான்! வீடு, அம்மா அப்பா தம்பி இவர்களைப் பிரிந்து இருப்பது எவ்வளவு கடினம் என்று புரிந்தது விடுதிக்குச் சென்ற பிறகு தான்!

இதுவரை வீட்டை விட்டு பிரிந்து சென்றதே கிடையாது நான்! சொல்லிக் கொண்டிருப்பேன் முன்பெல்லாம், "இந்த வீட்ட விட்டு வேற எங்கயாவது போக சொன்னா, வேகமா போய்டுவேன்", என்றெல்லாம்!

அப்படிச் சொல்லிக் கொண்டு தான், என் அப்பா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், நன்றாகப் படிக்கப் போகிறேன், பட்டம் விடப்போகிறேன் என்று வசனம் எல்லாம் பேசி, உள்ளூரில் இருக்கும் கல்லூரிக்கே, விடுதியில் சென்று சேர்ந்தேன்!

தோழிகள் எல்லாம் சொன்னார்கள், வேண்டாம், வேண்டாம், என்று! ஆனால், நான் கேட்டேனோ? இல்லவே இல்லை!

போன புதிதில் ஒன்றுமே தோன்றவில்லை, ஆனால், ஒரு மாதம் போனதும் தான் தெரிந்தது, இது கொஞ்சம் கடினம் தான் என்று, ஒரு மாதம் வரை ஏதோ சுமாராகத் தோன்றிய விடுதி உணவு, உள்ளே  இறங்கப் போர் செய்யத் தொடங்கியது ஒரே மாதத்தில். எப்போதுடா வீட்டிற்குப் போவோம், அம்மா கையால் சாப்பிடுவோம் என்று காத்துக் கொண்டு கிடப்பேன்!

அது என்ன தான் மாயமோ அம்மாவின் சாப்பாடு மட்டும் இருபது வருடமாக சாப்பிட்டும், அதே தித்திப்போடு இருக்கிறது இன்றும், சலிக்கவே இல்லை!

காரணம், அதில் அவர் ரகசியமாய் கலந்துவிடும் அன்பு தான் என்பது இப்போது தெளிவாகப் புரிகிறது.

ஒரு வருடம் விடுதியில் இருந்த பிறகு இப்போது என்னிடம் கேட்டால், "வீட்டிலேயே இருக்கிறேன்", என்று தான் சொல்வேன்!

ஒரு வருடம் விடுதியில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன், துணி துவைப்பதில் இருந்து, தலை பின்னுவது வரை கற்றுக் கொண்டேன்! சோகம் என்றோ, ஆனந்தம் என்றோ ஒரு தோழி சொல்லும் போது, அதை எப்படிப் பகிர்ந்து கொள்ள வேண்டும், கற்றுக் கொண்டேன்.

வகுப்பறையில் தோழிகளைப் பற்றி அதிகம் அறியாத விஷயங்கள் எல்லாம், விடுதி அறைகளில் புரிந்து கொண்டேன்!

எத்தனை தான் இருந்தாலும், இனியும் வேண்டாமடா என்று, இறுதியில் வீட்டிற்கே வந்துவிட்டேன், அம்மா அப்பாவோடு இருக்க!

இப்போ சொல்லுங்க? பழைய சாதமா? பாயாசமா? எது வேணும்?