இன்று ஒரு பதிவு படித்தேன். ஆங்கில வழிக் கல்வியா இல்லை தமிழ் வழிக் கல்வியா எது சிறந்தது என்று. இதோ "இங்கு".
![]() |
| English or Tamil? |
ஆங்கிலம் படிக்க விருப்பம் இருப்பவர்கள் மட்டும் படிக்கட்டும். உண்மை, நான் பொறியியல் மாணவி. சிறுவயதில் இருந்து ஆங்கில வழிக் கல்வி தான் கற்றேன். மூன்று பள்ளிகளில் படித்திருக்கிறேன். அதில் சிறுவயதில் படித்த பள்ளி ஆங்கில வழிக் கல்வி தரும் பள்ளி தான் என்ற போதிலும், அங்கு படித்தவரை எனக்கு ஆங்கிலம் பேச வராது! படித்து பரிட்சையில் எழுதி முதல் மதிப்பெண் வாங்கி விடுவேன் ஆனால். பிறகு ஒரு பள்ளிக்கு மாற்றினார்கள் அப்பாவிற்கு வேலை மாற்றம் ஆனபோது. அந்தப் பள்ளியில் ஆங்கிலத்தில் மட்டும் தான் பேச வேண்டும். அங்கு சென்று ஒரு மாதம் கடினமாக இருந்தது. பிறகு ஆங்கிலம் பேசப் பழகிவிட்டேன். அடுத்து பயின்ற பள்ளியும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளி, அங்கும் ஆங்கிலம் தான் பேசினார்கள். அங்கும் என்னால் பேச முடிந்தது. நான் ஆங்கில வழிக் கல்வியே சிறுவயதில் இருந்து படித்ததால், எனக்கு சிறுவயதில் ஆங்கிலம் பேச வராத போதிலும், நடுவில் பேசியே ஆக வேண்டும் என்ற நிபந்தனை வந்த போது, கொஞ்சம் கடினமாக இருந்த போதிலும், பேசிவிட்டேன், அடிப்படையில் நிறைய ஆங்கிலத்தில் எழுதி பழக்கம் இருந்ததால்.
ஆனால், இன்று நான் பொறியியல் படிக்கிறேன். என்னுடன் நிறைய பிள்ளைகள் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி கற்றவர்கள் படிக்கிறார்கள், அவர்களில் பலர் ஆங்கில வழியில் படிக்க மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதில் வெகு சிலரே ஆங்கிலத்தில் பயில பழகி இருக்கிறார்கள்.
என் தோழி ஒருத்தி, பள்ளியில் நிறைய மதிப்பெண்கள் பெற்று பொறியியல் சேர்ந்தவள், சிறுவயதில் இருந்து அவளது பள்ளியில் அவள் தான் முதல் மதிப்பெண். ஆனால், தமிழ் வழிக் கல்வி பயின்றவள். இப்போது கல்லூரியில் வந்து எல்லாம் ஆங்கிலம் என்றதும், அவளுக்குக் கடினமாக இருக்கிறது. இதுவரை முதல் மதிப்பெண் மட்டுமே வாங்கிப் பழகியவளுக்கு, இங்கு வந்து ஆங்கிலம் என்ற காரணத்தால் அவளது மதிப்பெண் குறைந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவளது தன்னம்பிக்கை சுத்தமாக இப்போது அடிபட்டுவிட்டது. அவள் படிப்பதற்கே தகுதி அற்றவள் என்பது போல நினைக்கத் தொடங்கிவிட்டாள். மேல் படிப்புப் படிக்கலாம், வேலைக்குச் செல்லலாம் என்று பள்ளியில் படிக்கும் போது நம்பிக்கையோடு இருந்தவள், இப்போது இந்த நான்கு ஆண்டுகள் மட்டும் போதும், எனக்கு படிப்பே வரவில்லை என்று சொல்கிறாள்.
காரணம், ஆங்கிலம், இதே பாடத்தைத் அவள் இப்போது தமிழில் படித்திருந்தால், உறுதியாகச் சொல்ல முடியும் என்னால், அவள் முதல் மதிப்பெண் இப்போதும் பெறமுடியும் என்று.
இங்கு எனக்குத் தெரிந்து, ஆங்கில வழிக் கல்வி, தமிழ் வழிக் கல்வி எது வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், சிறுவயதில் இருந்தே ஆங்கில வழிக் கல்வி என்றால் ஆங்கில வழிக் கல்வி. தமிழ் என்றால் இறுதி வரை தமிழிலேயே படிக்கலாம். நடுவில் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கோ, ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கோ மாறும் போது தான் பிரச்சனை வருகிறது என்பது எனது கருத்து.
உதாரணமாக இப்போது என்னை தமிழில் பொறியியல் படிக்கச் சொன்னால், எனக்குக் கடினமாக இருக்கும். ஆனால், என்னால் படிக்க முடியும், காரணம் தமிழ் என் தாய் மொழி. இதுவே, தமிழ் வழிக் கல்வி பயின்ற ஒரு மாணவரால், இதே போல ஆங்கிலவழியில் படிக்க இயலுமா என்பது சிறிது சந்தேகம் தான். ஆனால், பழகப் பழக வந்துவிடும். ஆனால், பழகும் வரை பலரும் தாக்குப் பிடிப்பதில்லை என்பது தான் இங்கு பிரச்சனை.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?





