முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை --> காதலி காதலி!#13

முந்தைய பாகங்கள்:  

காதலி காதலி!  #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 |   #10 |   #11 |  #12


அந்தச் சின்ன வீடு, ஏழ்மையின் சின்னமாக இருந்தது. மருந்து வாசனை நிறைந்து இருந்தது வீடு முழுவதும், குமாரசாமியின் தோற்றமும், அந்த மருந்து வாசனையும், அவரது உடல் மிக மோசமான நிலையில் இருக்கிறது என்பதை சொல்லிக் கொண்டு இருந்தன.

"குமாரண்ணே, ஆளே மாறிப் போய்ட்டிங்களே.. ஒடம்புக்கு என்னாச்சு? முன்னாடி எவ்ளோ திடமா இருப்பிங்க, என்ன சொல்விங்கலே, வயசுப் பையன் நல்லா சாப்டுபா, ஒல்லியா இருக்கியேன்னு.. உங்க ஒடம்புக்கு இப்போ என்னாச்சு-ணா?"

"ஒண்ணும்ல தம்பி, முன்னாடி நல்லா இளம் வயசுல, தண்ணி போட்டுட்டு திரிஞ்சேன், கொஞ்ச வயசு ஒன்னும் தெரியல, ஆனா இப்போ தான் எல்லாம் வேலையக் காட்டுது, வைத்துல புத்துநோய் கணக்கா ஏதோ வந்த்ருக்காம்.. மருந்து சாப்டுட்டு இருக்கேன்.. என் பொண்டாட்டி போனப்றம் ரொம்ப சிரமமா போச்சுப்பா., ஒத்தைல இந்த வியாதியோட அவதிப்படறேன், என் பையன் எனக்கு மாசம் மாசம் பணம் மட்டும் குடுக்கறான், பணம் குடுக்கக் கூட அவன் இங்க வரது இல்ல, யார்கிட்டயாவது குடுத்து விடுவான், பணம் போதுமாப்பா?, இப்போ எனக்கு பக்கத்துல ஆதரவாப் பேச ஆள் இல்லாம, நரகமா போகுதுப்பா வாழ்க்க.", அழுகாத குறையாய்ப் பேசினார் குமரேசன்.

பாசத்திற்காக ஏங்கிக் கொண்டு, தனிமையின் கொடுமையைப் பேசிக்கொண்டு இருந்தன அவரது ஒளி இழந்த கண்கள்!

"நீங்க வருத்தப் படாதீங்கணே, பேசாம நீங்க என்னோட வாங்க, நான் உங்கள பாத்துக்கறேன், நான் இப்போ நல்லா இருகேன், உங்கள நல்ல வைத்தியர்கிட்ட காட்டி, குணப்படுத்திடலாம், என்னோட வாங்க..", தனக்கு உதவி செய்த குமரேசன் அண்ணன் இன்று வாடுவதை மனம் ஏற்கவில்லை, கண்ணீரோடு அழைத்தார் ராமு.

"இல்லப்பா.. என்னதான் இருந்தாலும், உன்னோட வந்துட்டா,  ஊர்ல இன்னும் என் புள்ளைய தான்பா தப்பாப் பேசுவாங்க, பாரு, யாரு பெத்த புள்ளையோ பாத்துக்குது, சொந்தப் புள்ள இருந்து என்ன புண்ணியம்னு, என் புள்ளைக்கு அந்தப் பேரு வேணாம்பா.. கால் காசுனாலும் என் புள்ளயோட காசுல வாழ்ந்துட்டு போறேன்பா.. உம்பாசத்துக்கு ரொம்ப சந்தோசம்பா.."

"ஏண்ணே இப்டி பேசறிங்க, நீங்க என் வீட்டுக்கு வரலேனாலும், நான் உங்கள அடிக்கடி வந்து பாத்துக்கறேன்.. உங்கள இப்டி பாக்க முடிலணே என்னால.."

"சரி தம்பி, என் கதையக் கேட்டா இப்டி தான் இருக்கும் அழுகையும் பாரமுமா.. நீ நல்லா இருக்கேல? நீ பெரிய அதிகாரியாகப் போறேன்னு சொல்லிட்டு ஊர விட்டுப் போனியேப்பா, உன் மனசுப்போல நடந்ததா எல்லாம்?"

"இல்லண்ணே.. நான் மாவட்ட ஆட்சியாளரா வரணும்னு நெனச்சேன்.. ஆனா முயற்சி பண்ணி, கடைசிக் கட்டத்துல தோத்துப் போய்டேன்ணே"

"அப்போ இப்போ என்ன வேலப்பா பாக்குற?"

"இப்போ ஒரு பெரிய தொழிற்சாலை வச்சுருக்கேன்ணே, ரொம்ப சிரமப்பட்டு இன்னைக்கு இந்த நிலைக்கு வந்த்ருக்கேன்ணே, என் ரேணுகாவ விட்டுப் போனப்ரமா, ரொம்ப சிரமப் பட்டு தான்ணே இந்த நிலைக்கு வர முடிஞ்சுது. இப்போ நான் நல்லா இருக்கேன் அவள நல்லாப் பாத்துக்க முடியும் என்னால, ரேணுகா இப்போ எங்கண்ணே இருக்கா?"

"ரேணுகா, ஏதோ மெட்ராசுக்குப் போறதா சொல்லிட்டு, நீ போன ரெண்டு வாரத்துலயே, கைக்கொழந்தைய தூக்கிட்டு கிளம்பிச்சுப்பா ., நானும் இங்க இருமானு சொன்னேன், கேக்லப்பா, அதோட அப்பா கூட வந்து கூப்டு பாத்தாரு, போகலப்பா.. நான் தான் கடைசிக்கு என் வண்டில கொண்டுபோய் ரயில் ஏத்திவிட்டேன்.."

"இப்போ எங்க இருக்கானு தெரியுமா மெட்ராசுல?"

"எங்கனு சரியாத் தெரியலயேப்பா.. ஏதோ ஒரு அம்ருதானு ஒரு நிறுவனத்துல வேல பாக்றதா கேள்விப்பட்டேன்.."

"அப்படியாணே, நான் போய்ப் பாக்கறேன்.. அவள விட்டுப் பிரிஞ்சு போய் ரொம்ப வருத்தப்பட்டேணே ஆனாலும் ஒரு வைராக்கியம், அதான் பெரியாலாகாம வரக்குடாதுனு இருந்துட்டேன்.. இப்போ எங்க ரேணுகாவ பாக்கவே முடியாமப் போயிடுமோனு வருத்தமா இருக்குணே.."

"அதெல்லாம் ஒன்னும் ஆகாதுப்பா, போய் அந்த எடத்துல விசாரிச்சுப் பாரு, விலாசம் கிடைக்கும்..."

"சரிணே, இதுல உங்களுக்கு வாங்கிட்டு வந்த துணி, பழம் எல்லாம் இருக்கு, ஒடம்ப நல்லாப் பாத்துக்கோங்க..", தான் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் கொடுத்து விட்டு கிளம்பினார் ராமச்சந்திரன்.

"சரிப்பா பாத்துப் போயிட்டு வா.. அடுத்த முறை ரேனுகாவோட என்னப் பாக்க வாப்பா.."

மனம் கனத்தது, வீண் வைராக்கியத்தால் ரேணுகாவை இத்தனை நாள் காணாமல் போனது எவ்வளவு பெரிய தவறு என்று எண்ணிக் கொண்டே வெளியே வந்தார் வீட்டை விட்டு.

அந்த வரிசை வீட்டின் இறுதியில், அவரும் ரேணுகாவும் முதலில் காதல் வாழ்க்கை தொடங்கிய வீடு, இன்று வேறு யாரோ குடியிருந்தார்கள் அதில், ஆனால், இன்னும் அந்த வீட்டின் வாசலில் ரேணுகா பெட்டியோடு வந்து நின்ற இரவு, தன்னைக் கட்டி அணைத்து அழுதது காட்சியாய்த் தெரிந்தது அவருக்கு. மீண்டும் அதே போல் காதல் வாழ்க்கை வாழ மனம் ஏங்கியது.

காட்சியைக் கலைத்தது, விழியில் தேங்கிய நீர்...!

தான் வந்து சென்றதற்கு அடையாளமாய், கண்ணீரை விட்டுச்சென்றார்.
நினைவுகளோடு, பயணத்தைத் தொடங்கினார் ராமச்சந்திரன் சென்னையை நோக்கி.

------------------------------------------------------------------------------------

சேர்ந்தார்களா ரேணுகாவும் ராமுவும்? வாசிக்கலாம் வரும் பாகங்களில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...