முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை!

எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது.

பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது.

பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்? நடனம், பாட்டு போன்ற போட்டிகளோடு சேர்த்து? அதில் எப்படி வார்த்தைகளை உச்சரிக்கிறோம் என்பதெல்லாம் பார்ப்பார்கள். அப்படி உச்சரிப்பெல்லாம் அத்தனை முக்கியம் இல்லையே தினமும் நாம் நம் அம்மாவிடமும், அப்பாவிடமும் பேசிக் கொள்ளும் போது?  முக்கியமாகச் சொல்ல வரும் கருத்தை குழப்பாமல் புரியும்படி சொல்ல வேண்டும். (இப்ப நான் கொழப்பற மாதிரி கொழப்பக் கூடாது)

ஆக, பேசும் போது, நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை, உங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றாலும் கூட, அதை அடுத்தவர் மனம் கோணாமல் எப்படிச் சொல்கிறீர்கள் என்பதும் முக்கியம். மனம் கோணாமல் சொல்ல, வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். என்ன செய்ய, பெரும்பாலும் யாராலுமே அடுத்தவரைப் புண்படுத்தாமல் பேச முடிவதே இல்லை! நேற்று நான் உங்களைப் புண்படுத்தினேனே? அதற்கு முந்தைய நாள் நீங்கள் என்னைப் புண்படுத்தினீர்களே? அது போல, யாராலும் புண்படுத்தாமல் பேச முடிவதில்லை! என்ன செய்ய? முடியாது தான், ஆனாலும் வேண்டும் என்றே, தெரிந்தே ஒருவரைக் காயப்படுத்தும்படிப் பேசாமல் இருக்க முடியும். ஆனால், அதையும் நாம் செய்வதில்லை! 

ஆக, நமக்குப் பேசும் கலை தெரியவில்லை, புரியவில்லை!

இன்னும் ஒரு முக்கியமான விஷயமாக பேசுவதில் பார்த்தால், "பிழை"! பெரும்பாலும் பேசும்போது பிழையாக நாம் நமது தாய் மொழியைப் பேச மாட்டோம். ஆனால், அதுவும் சமீபமாக நடக்கத் தான் செய்கிறது. காரணம், நமக்கு தாய் மொழி அல்லாது வேறு மொழியில் பேசிப் பழகி இருப்பது!

எனக்கு ஒரு தோழி இருந்தாள், அவளுக்குத் தாய் மொழி இந்தி. ஆனால், அவளுக்கு இந்தியைப் பிழை இன்றிப் பேச வராதாம் பத்தாவது படிக்கும் வரை, காரணம் சிறுவயதில் இருந்தே ஆங்கிலம் பேசிப் பழக்கி இருக்கிறார்கள் பெற்றோர், படித்ததும் ஆங்கில வழிக் கல்வி, இந்தி என்ற பாடம் கூடக் கிடையாது! அதனால், அவளுக்கு தப்பும் தவறுமாகத் தான் பேச வருமாம். ஆண்பாலை பெண்ணாக, பெண்ணை ஆணாக, நிகழ்காலம் எதிர்காலமாக, இப்படித் தான் பேசிப் பழகி இருக்கிறாள். 

இப்போது இந்தி நன்றாகவே பேசுவாள் என்றாலும், ஆங்கிலம் அளவுக்கு வராது. நான் எல்லாம் ஆங்கிலம் தான் பேசிப் பழகிக் கொண்டு இருப்பேன் ஆறாம் வகுப்பில். அதைப் பேசிப் பழகுவதற்குள் நான் பட்ட பாடு இருக்கிறதே! "ஐயயையையூ"!

என் நல்ல நேரம் ஆறாம் வகுப்பிலேயே ஆங்கிலம் பேசப் பழக ஆரம்பித்துவிட்டேன். இப்போது ஓரளவு பிழை இல்லாமல் பேச முடியும், (தமிழ் அளவுக்கு வருமா என்றால், இல்லை) ஆனால், தமிழ் வழியிலேயே படித்து, ஆங்கிலத்தைப் பேசப் பழகாமல், இப்போது கல்லூரியில் வந்து பேசப் பழகுபவர்கள், பாவம்! ஒரே கேலியும் கிண்டலும் தான் மிச்சம்.

ஆசிரியர் சொல்வார், அவர்கள் பேசிப் பழகட்டும் கிண்டல் செய்ய வேண்டாம் என்று, ஆனால், யார் அதைக் கேட்பது? "இது கூட சொல்லத் தெரியல, இது கூட பேசத் தெரியல!", இப்படிக் கேலி செய்யத்தான் செய்வார்கள்.

சிலருக்கு ஆங்கிலம் சரியாக வராது, கொஞ்சம் பிழையோடு தான் எழுதுவார்கள், நிகழ்காலம் எதிர்காலம் சரியாக எப்படிச் சொல்வது என்று தெரியாது. ஆனால், அறிவாளியாக இருப்பார்கள். அப்படி ஒரு மாணவி என் வகுப்பில், படித்துப் புரிந்ததை சரியாகத் தான் எழுதி இருந்தாள், ஆனால், கொஞ்சம் ஆங்கிலத்தில் அங்கங்கு பிழைகள். அதை அந்த ஆசிரியர், வகுப்பில் எல்லார் முன்னும் வாசித்துக் காட்டி, சிரித்தார்!!




இப்படிச் செய்து இருக்கக் கூடாது. தனியாக அவளிடம் சொல்லி, இதை இப்படித் திருத்திக் கொள், என்று சொல்லி இருக்கலாம்! ஆனால் செய்யவில்லை!

ஒருவரது நிறைகளை எப்போதும் பலரும் பார்க்கும் படி சொல்ல வேண்டும், பிழைகளை முடிந்த அளவு, தனியாகச் சொல்ல வேண்டும்! ஆனால், நாம் அப்படிச் செய்கிறோமா? இல்லை! அடுத்தவரை விட நமக்கு அதிகம் தெரிகிறது என்பதை, அவரை மட்டம் தட்டிக் காட்டிக் கொள்வதிலேயே பெருமையாகக் கொள்கிறோம்! 

இன்னும் ஒரு வழக்கம் இப்போது இருக்கிறது. ஆங்கிலத்தில் பிழையோடு பேசினாலோ எழுதினாலோ, அது மோசம். இதே தமிழில் எழுதினால், அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மாறாக, எனக்குத் தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியாது, என்பது பெருமையாக இருக்கிறது!

பிழை என்றால், அது இரண்டு மொழியிலும் பிழை தானே? இரண்டு என்ன? எந்த மொழியிலும் பிழை தானே?

சிலருக்கு  பிழையோடு பேசினால், கோவம் வரும், சிலர் ஆங்கிலம் தெரியாதவர்களை மதிக்கமாட்டார்கள், சிலர் கேலி பேசுவார்கள். ஆனால், இதில் எதுவுமே அவசியம் இல்லை!

பாவம், பேசுபவர், தெரியாமல் தானே பிழையாகப் பேசுகிறார்? அதை சரி செய்ய, அவருக்கு உதவ வேண்டுமே தவிர, கேலி பேசுவதோ, கோபப் படுவதோ சரியான அணுகுறை கிடையாதே? 

உங்கள் தோழிக்கு ஆங்கிலம் சரியாகப் பேசவரவில்லையா?தமிழ் தெரியாதா? இந்தி, மலையாளம், கன்னடம், இப்படி உங்களுக்குத் தெரிந்த மொழி அவருக்குத் தெரியாதா? சொல்லிக் கொடுங்கள், அதை விடுத்து, சிரிப்பதும், கேலி பேசுவதும்? 

என் நண்பர்கள், நான் தெரியாமல் தவறாகப் பிழையோடு ஆங்கிலம் பேசினால் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று நேற்று முகப்புத்தகத்தில் ஒரு வாக்கியம் எழுதினேன். 

"SOMETIMES", it's good to hurt, and to get hurted! Applicable both physically and mentally! — feeling Hurted.

இப்படி! "Hurted" என்று ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் கிடையாது. சரி இதை வைத்து என்னதான் செய்கிறார்கள் என்று பார்த்தேன்!








நான் எதிர்பார்த்தது நான்கு விதமான கருத்துரைகள்,

  1. கண்மணி, என்ன ஆச்சு? ஏன் என்ன கஷ்டம்? - இப்படி யாராவது பாசமாகக் கேட்பார்கள். அதாவது, பிழையாகவே இருந்தாலும், அதில் இருக்கும் கருத்தை மட்டும் புரிந்து கொண்டு எனக்கு ஆறுதலாய்ப் பேச நினைப்பவர்கள். (பாசக்காரப் புள்ளைங்க!)
  2. "Hurted" இப்படி வார்த்தை இல்லை, "Hurt" என்று தான் சொல்ல வேண்டும் - இப்படிச் சிலர் சொல்லலாம் என்று. அதாவது, என் தவறைத் திருத்த உதவுபவர்கள்.
  3. "RIP English" - இது போன்று யாராவது சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன், காரணம், ஒருவர் தவறாக ஆங்கிலம் பேசும்போது இப்படிக் கேலி செய்யச் சொல்வார்கள். இதற்கு என்றே தனியாக இணையத்தில் கேலி செய்யும் பக்கங்கள், தளங்கள் எல்லாம் உள்ளன! அதாவது, என் தவறைச் சுட்டிக் காட்டி, திருத்த விரும்பாமல், கேலி மட்டும் செய்ய விரும்புபவர்கள். (ஆனால், என் பதிவில் சொன்ன தோழன், சும்மா விளையாட்டுக்கு அப்படிச் சொல்லி இருக்கிறான் - இப்படியும் ஒரு சில நண்பர்கள் நமக்கு இருக்கத் தானே செய்வார்கள், கீழே விழுந்தாலும் கூட, கொஞ்சம் சிரித்தவாறே கை கொடுத்துத் தூக்கி, நம்மையும் சிரிக்க வைப்பார்களே, அப்படி!)
  4. பிறகு நேரடியாகவே "இப்படி தப்புத் தப்பா சொல்றதுக்கு, தெண்டம், தமிழ் தெரியும்ல, அதுல சொல்லிட்டுப் போக வேண்டியது தான?", என்று சொல்வார்கள் என்றும் எதிர்பார்த்தேன். இது ஒன்று கோபமாக அல்லது அதீத அக்கறையோடு, இரண்டு வகையிலும் சொல்லலாம். வெளியில் கருத்துரையில் சொல்லாமல், தனியாக என்னிடம் மட்டும் சொன்னால் அக்கறை - இல்லை எனில், கோபம்.
இதில் நான் எதிர்பார்த்த நான்கில் மூன்று வந்தது, முதல் கருத்தைத் தவிர்த்து (ஒருத்தருக்கும் பாசமே இல்லப்பா! ;) ) , இன்னும் ஒரு வகையான கருத்து வந்தது!!! அது தான் நான் எதிர் பார்க்காத ஒன்று! ஆங்கிலத்தில், மோசமாகத் திட்டும், இழிவு படுத்தும் ஒரு வாசகம் தாங்கிய ஒரு படம்! (நல்லவேளை, அதில் இருந்த ஒரு வார்த்தையை அழித்து இருந்தார்கள்!) இப்படி ஒன்றை நான் எதிர் பார்க்கவில்லை, அந்தக் கருத்தை நான் அழித்துவிட்டேன் பார்த்ததும். ஆனாலும், இப்படி எல்லாம் எனக்கு நண்பர்கள் இருந்தார்களா? அடடே, அதுவும் என் உடன் படித்தவர்கள்? ஒரே வகுப்பில் படித்தவர்கள்? அசிங்கமாகத் திட்டும் அளவுக்கு, இது ஒன்றும் பெரிய தவறு இல்லையே??

அந்த நபர் மீது இருந்த மரியாதை தூள் தூளானது! என்ன செய்ய!

இப்படிப் பேசும்போது தேவை இல்லாததை (அதாவது, தகாத வார்த்தைகள்) எல்லாம், தவிர்க்க வேண்டியதை எல்லாம் "களை!" எனலாம்.

அதென்ன கழை?? அதாவது, நமக்குப் பிடித்தமானவர்கள் என்றால், அவர்கள் சோகத்தில் இருந்தால், அது நம்மையும் பாதிக்கும் அல்லவா? அவர்களை சமாதானம் செய்ய முயல்வோமே? ஆறுதலாகப் பேசுவோமே? அது தான் கழை! பேசும் கலையில் கழை முக்கியம்.

இறுதியாக, நிகழ்காலம், எதிர்காலம் மாற்றிப் பேசலாம், ஆண்பால் பெண்பால் மாற்றிக் கூடப் பேசலாம், இவை தவறு தான் என்றாலும், அவ்வளவு பெரிய தவறில்லை. ஆனால், வேண்டும் என்றே மற்றவரைக் கேலி செய்வதும், புண்படும்படியும் பேசுவது, தவறு தானே? 

ஆக, கழை சேர்த்து, களை தவிர்த்துப் பேசுவோம்!

கருத்துகள்

  1. http://dindiguldhanabalan.blogspot.in/2013/03/Avoid-Stage-Fear.html - வாசித்து விட்டு சொல்லுங்கள்.... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி :) நான் படித்துவிட்டுச் சொல்கிறேன்.

      நீக்கு
  2. :) //"SOMETIMES", it's good to hurt, and to get hurted! Applicable both physically and mentally! — feeling Hurted.// ஓ இது உங்களின் இந்த பதிவுக்கான டெஸ்ட் போஸ்டா ! சூப்பர்-ங்க ! நல்ல சிந்தனை பூர்வமான பதிவு , கழை என்றால் கம்பு,குச்சி என்றுதான் அர்த்தம் தெரியும் எனக்கு ! இதற்கு புதிய அர்த்தம் சொல்லிக்கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அக்கா இவ்வளவு நல்ல கருத்துக்களை நீங்க ஒரு "Facebook Page" மூலமாக சொல்லலாமே...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) இல்ல தம்பி, ஃபேஸ்புக்க விட இது தான் ஒரு ஒழுங்கா இருக்கும், தனியா ஃபேஸ்புக் பேஜ்ல இத நான் ஷேர் பண்றனே??

      நீக்கு
  4. கண்மணி, என்ன ஆச்சு? ஏன் என்ன கஷ்டம்? ;)

    முடிஞ்சு போன பந்தயத்துல ரொம்ப மெதுவா வந்து கலந்துட்டனோ ?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்