நம்மில் பலருக்கும் பள்ளியில் பல சுவாரசியமான அனுபவங்கள் இருக்கும். பல நல்ல பழக்கங்கள், சில தீய பழக்கங்கள் என அனைத்தையும் கற்றுக் கொடுத்திருக்கும் நமது பள்ளிக் கூடங்கள்.
பள்ளிகளில் பல வகை உண்டு. பள்ளிகளில் வகையா? ஆம்!
ஒவ்வொரு பள்ளியையும் அதன் குறிக்கோள்( motto ) அடிப்படையில் வகைப்படுத்தலாம்.
1) சில பள்ளிகள், பணத்திற்காக மட்டுமே செயல்படுவதுண்டு.
2) சில பள்ளிகள், மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக மாணவர்களை மாற்றுவதில் சிறந்தவை!
3) சில பள்ளிகள், மதிப்பெண்கள் அதிகம் பெறுவதைக் காட்டிலும், ஒழுக்கமும், நாட்டுப் பற்றும் நிறைந்த மாணவர்களை உருவாக்கும் பணியே சிறந்தது என்னும் கொள்கை உடையன!
இது போல ஆசிரியர்களையும் கூட வகைப்படுத்தலாம்!
1 ) இயந்திரத்தனமாய் பாடங்களை நடத்துவோர் (ஒப்பிப்போர்)
2 ) எந்நேரமும் பாடம் தவிர்த்து நக்கல் நையாண்டி என்று தேவையற்ற பேச்சுகளில் நாட்டம் உள்ளோர்.
3 ) ஒழுக்கம், நாட்டுப் பற்று, சமுதாய அக்கறை முதலியவற்றை பாடத்தோடு சேர்த்து புகட்டுவோர்!
பெரும்பாலான நேரங்களில், பெற்றோர்கள் தேர்வு செய்யும் பள்ளிகள், இரண்டாம் வகையைச் சார்ந்தனவாகவே இருக்கின்றன. (மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக மாணவர்களை மாற்றுவதில் சிறந்தவை!)
காரணம்: நிறைய மதிப்பெண்கள் பெற்றால், பொறியியல், மருத்துவம் சேர்த்து, பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக வெகு விரைவில் பிள்ளைகளை மாற்றலாம்!
பிள்ளைகளுக்குப் பிடித்த ஆசிரியரும் பெரும்பாலும் இரண்டாம் வகையைச் சார்ந்தவராகவே இருக்கிறார்! காரணம் ஆனந்தமாய் இருக்கலாம் அந்த ஆசிரியர் வரும் நேரத்தில்!
ஆனால், நன்மை தருவது, நமக்கு அவசியமானது, மூன்றாம் வகையே!
மதிப்பெண்கள் மட்டுமே போதாது. கற்ற கல்வியை பிறர் முன்னேற்றவும் பயன்படுத்த வேண்டும் என்ற மனப் பக்குவம் தேவை!
கோடிக்கணக்கில் செலவு செய்து மருத்துவம் படிக்கும் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை, கோடிகளை மீட்க மருத்துவம் பார்க்குமே தவிர, சேவை உள்ளத்தோடு அல்ல!போட்ட பணத்தை மீட்கப் போராடும் பந்தயக் குதிரைகளாய் மாற்றும் இந்த நிலை மாற்ற ஆசிரியர்களால் மட்டுமே இயலும்.
மருத்துவமோ, பொறியியலோ, எந்தப் பாடப் பிரிவைச் சார்ந்த ஆசிரியராக இருப்பினும், சிறிது அக்கறை காட்டுங்கள் தங்கள் மாணவரின் சுய சிந்தனைக்காகவும் நாட்டுப்பற்றுக்காகவும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதாம்! ஐந்து வயது முதல், ஏன், வயிற்றில் கரு வளரும் நாள் தொடங்கி, அன்பை போதியுங்கள்! பெற்றோர்களே பல இடத்தில் சாதி மதம் என்று பேசி, பிள்ளைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் அவலம் பெரும்பாலாக நடந்து வருகிறது.
தவிர்த்திடுங்கள் இவற்றை எல்லாம். அன்பும், நேசமும், நிறைந்த சமுதாயம் நோக்கி முதலடி எடுத்து வைப்போம்!
என்றும் உங்கள்,
கண்மணி அன்போடு ♥ ♥ ♥
ஒரு தேசத்தின் தலைமுறையையே தீர்மாணிக்கும் திறன் கல்விக்கு மட்டுமே உண்டு,கல்வியின் நிலையில் ஏற்பட்ட நிலைமாற்றமே நம் சமுதாயத்தின் நிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம்.மதிப்பெண் சார்ந்த கல்வி முறை மாற வேண்டும்.மதிப்பு கூட்டப்பட்ட(Value added)கல்வி முறை அவசியம் நம் நாட்டிற்கு தேவை.
பதிலளிநீக்குநிச்சயமாக ஒரு மாற்றம் தேவை! கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்கு