முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை --> காதலி காதலி!#17

முந்தைய பாகங்கள்:   

காதலி காதலி!  #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 |   #10 |   #11 |  #12 | #13 | #14 | #15
#16


"இங்க... முரளினு...", முரளி தங்கி இருந்த வீட்டில் இருந்த பெரியவரிடம் விசாரித்தார் ராமச்சந்திரன்.

"அவன் பயிற்சிக்குப் போயிருக்கான் ஐயா, இப்போ வர்ற நேரம் தான்.. நீங்க...?", பெரிய மீசை வைத்திருந்த அந்தப் பெரியவர் பதிலளித்தார். அவர் தான் முரளியின் நண்பனின் தந்தை.

"நான் முரளியோட அப்பா.."

"வாங்க, சாவி என்கிட்டே தான் இருக்கு, அவன் வர வரிக்கும் காத்திருங்க. வந்துடுவான்..நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்.."

சாவியை வாங்கிக் கொண்டு முரளியின் அறையில் அமர்ந்திருந்தார்கள் ராமச்சந்திரனும் ரேணுகாவும்.

இருவரும் பேசிக்கொள்ளவில்லை, நினைவுகளே பேசிக்கொண்டு இருந்தன அங்கே.

மகன் வந்ததும் எப்படிப் பேசுவது? என்ன சொல்வது? ஏன் இத்துனை நாள் வரவில்லை என்று கேட்டால் என்ன சொல்வது. அவனுக்கு எந்த உண்மையும் தெரியாதே.. என்னவென்று சொல்வது.. அம்மாவும் அப்பாவும் சண்டை இட்டுப் பிரிந்தோம் என்றா? மனைவி பிள்ளையை தனியே தவிக்க விட்டுச் சென்ற அப்பா என்று தன் மீது வெறுப்பு வந்துவிடுமோ? ரேணுகா தான் வெளிநாடு சென்றதாய் சொல்லி இருக்கிறாளே, அதே பொய்யை சொல்லி விடுவோமா? இல்லை வேண்டாம், தவறாக எண்ணி விடுவான் உண்மை தெரியும் போது. உண்மையை சொல்லிவிடுவோம். எல்லா உண்மையையும் சொல்லி விடுவோம். எண்ணங்கள் பழைய உடைந்த ஒலிப்பதிவுப் பெட்டி போல மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.

முரளி வந்துவிட்டான். அதையும் கவனிக்காமல் எண்ணங்களிலேயே மூழ்கி இருந்தார் ராமச்சந்திரன்.

"அப்பா..." முரளி சற்று தயக்கத்தோடு தான் அழைத்தான்.

நினைவு கலைந்தது.

மகனாகவே இருப்பினும், இத்துனை நாள் பார்க்கவில்லையே, அருகில் இல்லையே.. என்ன பேசுவது எப்படிப் பேச ஆரம்பிப்பது என்று சற்று தயங்கித்தான் இருந்தார்.

முரளியின் கண்களிலும் கண்ணீர் ராமச்சந்திரனும் அழுதுவிட்டிருந்தார்.

"அப்பா.. இப்போ தான் என்ன நியாபகம் வந்ததாப்பா? எங்கப்பா போனிங்க இவ்ளோ நாள்..? என்னப் பாக்கணும் பேசணும்னு ஒருதடவ கூடத் தோனலயாப்பா? உங்களுக்கும் அம்மாக்கும் என்னப்பா பிரச்சன? கடைசி வரைக்கும் அம்மா என்கிட்டே சொல்லவே இல்லப்பா.. நீங்க வெளிநாடு போயிருக்றதா சொல்லிட்டாங்க. சின்ன வயசுல நம்பினேன் அத. பெரியவன் ஆனதும் புரிஞ்சது, உங்களுக்கும் அம்மாக்கும் ஏதோ பிரச்சனணு, ஆனா அம்மாக்கு உங்களைப் பத்திப் பேசுனாலே அழுகையும் கோவமும் வருமேன்னு கேக்ரதயே விட்டுட்டேன்"

ராமச்சந்திரன் பேசவில்லை, குற்றவாளி போல் உணர்ந்தார். கண்கள் மட்டும் பாசத்தாலும், கண்ணீராலும் பேசிக் கொண்டு இருந்தன.

"ஏன்பா என்னப் பாக்க வரல.. என்னப்பா பிரச்சன உங்களுக்கும் அம்மாக்கும்..? சின்ன வயசுல இருந்து, ஒவ்வொருத்தரும் அவங்க அப்பா கூடப் போறதப் பாக்றப்போலாம் எவ்ளோ ஏங்கிருக்கேன்னு தெரியுமாப்பா.. தினமும் அம்மா நான் தூங்கிட்டேன்னு நெனச்சு உங்களைப் பத்திப் பேசி அழுவாங்க, அதெல்லாம் எவ்ளோ நரகமா இருந்தது தெரியுமாப்பா.. ஏன்பா எங்கள விட்டுப் போனிங்க...", கண்ணீர் வழியக் கேட்டான் முரளி.

"அப்பா பண்ணது தப்புதான்பா.. மன்னிச்சிடு.. மன்னிச்சிடுப்பா.. உங்களைப் பிரிஞ்சு தூரமா இருந்தேனே தவிர, உங்கள நெனைக்காத நொடி இல்லப்பா.. உங்கள தனியாத் தவிக்க விட்டு நான் உல்லாசமா வாழப் போகலப்பா.. உங்க அம்மாவுக்கும் எனக்கும் பிரச்சனையாப் போன, பணத்த சம்பாதிக்கத் தான் போனேன்., உங்கம்மாவும் நானும் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுக்கிட்டவங்க, எனக்காக கைய வெட்டிகிட்டு, அப்பாவப் பகச்சுக்கிட்டுக் கல்யாணம் செஞ்சுக்கிட்டா உங்க அம்மா.. ஆனா, நாள் போகப் போக, பணம் இல்லாம சண்ட வர ஆரமிச்சது, ஒரு நாள் பெருசா சண்ட வந்து, பணம் சம்பாதிக்காம உன்னப் பாக்கக்கூட மாட்டேன்னு கெளம்புனேன். அந்தக் கோவம், உங்கம்மா பணம் இல்லன்னு பேசுன பேச்சு, இதெல்லாம் தான் என்ன இத்தன நாளா பிரிச்சுவசிருச்சு. இப்போ என்கிட்டே பணம் இருக்கு.. ஆனா...", உடைந்து அழுதார்.. " என்ன மன்னிச்சிடுப்பா...", மகன் என்றும் பாராமல் காலில் விழச் சென்றார்.

"அப்பா..", விழ விடாமல் பிடித்தான் முரளி. "அப்பா.. உங்க மேல வருத்தம் அவ்ளோதான், கோவமில்லப்பா.. உங்க மேல எனக்கு எவ்ளோ பிரியம் தெரியுமாப்பா.." அப்பாவின் மீது சாய்ந்து அழுதான்.

கண்ணீரோடு அமைதியாய் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தாள் ரேணுகா. தான் செய்த பிழை, பணத்தின் மீது கொண்ட மோகம், தன் வாழ்வை எப்படிப் புரட்டிப் போட்டு இருந்தது என்பதை உணர்ந்தாள்.

----------------------------------------------------------------------------

முடிவு அடுத்த பாகத்தில்!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...