காதலி காதலி! #1 | #2
படிச்சிட்டு இங்க வாங்க
வீட்டுக்குள் நுழைந்ததும் அம்மாவிடம் கேட்க எண்ணினான்... ஆனாலும், திட்டு விழுமோ என்று பயம், தயங்கி மெளனமாக அமர்ந்து கொண்டான்.
ரேணுகா முகம் கழுவி, பால் குடித்து விட்டு, முரளியிடம் வந்தாள்; முரளி தயக்கமும் ஏக்கமுமாய் அமர்ந்திருப்பதைப் பார்த்து பேசத் தொடங்கினாள், "முரளி, என்னப்பா ஆச்சு? ஏன் ஒருமாதிரி இருக்க?
"நீங்க திட்ட மாட்டேன்னு சொல்லுங்க", முரளி தயக்கமாய் பேசினான்.
"சரி திட்டல, ஏண்டா பாடசாலையில ஏதும் சேட்ட செஞ்சிட்டியா?"
"இல்லம்மா.. இன்னிக்கு எங்க வகுப்புல புதுசா ஒரு பையன் சுரேசு-னு வந்திருக்கான். அவனோட அப்பாவும் வெளிநாட்ல தான் இருக்காங்களாம்.."
சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரேணுகாவின் முகம் மாறியது..
"பாருங்க உங்களுக்கு கோவம் வருது.."
"சரி சொல்லு, அதுக்கு என்ன? அவங்கப்பா இருந்தா?"
"இல்லமா.. அவங்கப்பா வராங்களாம் அடுத்த வாரம், நம்ம அப்பா எப்போமா வருவாங்க? சொல்லுங்கம்மா, இல்ல தொலைபேசிலயாச்சும் பேசறேன்மா.. நானும் எவ்ளோ நாளா கேக்கறேன் தொலைபேசில பேசறேன்னு.."
"எத்தன தடவ சொல்லிருக்கேன், அப்பாவப் பத்தி பேசாதனு, சொன்னாக் கேளுடா, அப்பா வருவாங்க, உனக்கு அப்டியும் அப்பாவ உடனே பாக்கணும்னா.. எண்ணக் சிரமப்படுத்திப் பாக்கணும்னா.. கேளு, தினமும் கேளு, கேட்டு என்ன சிரமப்படுத்து.." கோபத்தில் கத்தினாலும், அழுதாள் கதறி பின்பு.
அப்பாவைப் பற்றிக் கேட்டாலே அம்மாவுக்கு ஏன் இவ்வளவு கோவம்? புரியாமல் அமைதியானான் முரளி.
"அம்மா.. அழுவாதிங்கம்மா நான் இனிமேல் கேக்கமாட்டேன்மா, அப்பா வரப்போ பாத்துக்கறேன்மா.. மன்னிச்சுடும்மா தயவு செஞ்சு அழுவாதிங்கம்மா..", தானும் அழுதவாறு சமாதானம் செய்தான், அம்மா அழுவது பொறுக்காமல்.
முரளியை கட்டி அணைத்தவாறு, அழுதாள் ரேணுகா.
"நான் கேக்கமாட்டேன்மா இனிமேல்... எல்லாரும் அப்பா கூட போறப்போ எனக்கும் ஆசையா இருக்குமா.. எல்லாரும் அவங்க அப்பாவ பத்தி பேசறப்போ, எனக்கு வருத்தமா இருக்குமா.. அதான் கேட்டுட்றேன் கேக்கக்குடாதுனு நெனச்சாலும், அழுவாதிங்கம்மா...", அவனே தாயாய் மாறி, அவளது தலை கோதி ஆறுதல் சொன்னான்.
"எனக்கும் புரியுதுடா.. நேரம் வரப்போ அப்பாவ பாக்கலாம் கண்டிப்பா.. அப்பா நெஜம்மா வருவாங்கடா.. அம்மாகிட்ட சொல்லிருக்காங்க, வருவாங்க நிச்சயமா..", அழுகையுடன் பேசினாள் ரேணுகா.
அம்மாவின் அழுகை, அமைதியாக்கினாலும், மனதுள் வருத்தமும், ஏக்கமும் நிறைந்து இருந்தது முரளிக்கு.
இரவு வெகுநேரமாகியும் உறங்காமல், தான் செய்த முட்டாள்தனம் எண்ணி வேதனை அடைந்து கொண்டிருந்தாள் ரேணுகா. கணவன் அருகில் இல்லாமல் மகனின் கேள்விக்கும், சமுதாயத்தின் கேள்விக்கும் விடை சொல்ல வழி இன்றி தவித்து வாழும் வாழ்க்கை கசந்தது அவளுக்கு.
கணவனோடு சேர்ந்து இருந்த நொடிகள், கணவனின் அன்பு, அனைத்தும் நினைவாக வந்து வதைத்தது.
--------------------------------------------------------------------------------
ஏன் கணவன் ரேணுகாவோடு இல்லை? பிரிந்தது ஏன்...?
நாளை வாசிக்கலாம் அடுத்த பாகத்தில்.
கருத்துகள்
கருத்துரையிடுக