முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்பா - அம்மா - மகளின் பார்வையில்! #3



"நல்ல மனைவியாக இருப்பது எப்படி?" இந்தத் தலைப்பில் தான் இந்தத் தொடர் பதிவை எழுதத் தொடங்கினேன். ஆனால், அது பொருத்தமாக எனக்குத் தோன்றவில்லை இப்போது, அதனால், தலைப்பை மாற்றிக் கொள்கிறேன், "அப்பா -அம்மா - மகளின் பார்வையில்!" என்று. உங்களுக்கு எதுவும் வருத்தம் இல்லை தானே, இந்தத் தலைப்பு மாற்றத்தில்?

முந்தைய பதிவுகள்:

அப்பா - அம்மா - மகளின் பார்வையில்! #1 #2



இது வரை ஐம்பது முத்துக்களில் ஐந்தே ஐந்து முத்துகளைத் தான் உங்களுக்குக் காட்டினேன். இதோ இன்று அடுத்த ஐந்து முத்துக்களைப் பார்க்கலாம்! 

முத்து ஆறு:
ஒரு காரியத்தைக் கணவன் சாதித்து முடித்தவுடன் மனைவி அதைப் பாராட்டும் கையோடு அடுத்த காரியத்தையும் சுட்டிக் காட்ட வேண்டும். அதனை அடையத் தட்டிக் கொடுக்க வேண்டும். அது நிறைவேறியதும் அடுத்தது. அதன் பிறகு இன்னொன்று. இப்படியே அவனை ஆற்றுப் படுத்த வேண்டும்.

  • உண்மை அப்பாவின் வெற்றியில் சாதனையில் அம்மாவின் பெரும்பங்கு இது தான். முன்பு நான் குறிப்பிட்டது போலவே இங்கும் நாம் அம்மாவும் வேலைக்குப் போகும் சூழல், அல்லது கைத்தொழில் செய்யும் சூழல் போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • இன்றெல்லாம் ஆண்கள் மட்டும் வேலைக்குச் செல்வதில்லை, பெண்களும் நிறைய சாதிக்கிறார்கள் தானே? கைத்தொழில் செய்யும் பெண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
  • குப்பைகளைக் கூட அழகான பொருட்களாக தயாரிக்கும் பெண்களை நான் கண்டதுண்டு. அப்படி இருக்கும் திறமைசாலியான ஒரு அம்மா, மனைவி, கணவனிடம் இதோ, மேல் சொன்ன அந்த தட்டிக் கொடுக்கும் மனப்பான்மையை தான் விரும்புவாள்.
  • நிறைய பெண்கள் இன்று இல்லத்தரசிகளாக இருந்தாலும், வீட்டிலேயே தையல், அழகு நிலையம், ஓவியம் வரைந்து விற்பது, இப்படி நிறைய செய்து வருகிறார்கள். எனக்குத் தெரிந்து ஒரு அம்மா, இப்படி துணி தைத்து தைத்தே ஒற்றை ஆளாக வீடு கட்டி இருக்கிறார் என்றால் பாருங்கள்.
  • ஆக, மனைவி கணவனுக்கு உறுதுணையாகவும், கணவன் மனைவிக்கு உறுதுணையாகவும் இருப்பது மிகவும் அவசியம்.
  • "கணவனது பொறுப்பு வேலைக்குச் செல்வது, மனைவிக்கு என்ன வீட்டில் தேவையற்ற வேலை இது போல தைப்பது, அழகு நிலையம் வைப்பது என்று பிள்ளைகளை கவனிக்க இயலாது", என்று சொல்லி மனைவியை வீட்டு வேலை பிள்ளைகள் என்று மட்டும் முடக்கி வைக்காமல், அவரது திறமைகளையும் வெளிப்படுத்த வாய்ப்புக் கொடுத்து, தட்டிக் கொடுப்பதையே ஒரு பெண் விரும்புவார்.
  • வீட்டில் பிள்ளைகளை கவனிப்பது என்பது, அம்மா அப்பா, இருவரது பொறுப்பும் தான் என்பதை நன்றாக இருவரும் உணர வேண்டும்.
  • அம்மா மட்டுமே பிள்ளைகளை வீட்டில் கவனித்துக் கொண்டு இருந்தால், அம்மாவின் மீது மட்டுமே பிள்ளைகளுக்கு பிரியம் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
  • பணம் சம்பாதித்துக் கொடுப்பதோடு கடமை முடிந்தது என்று இருக்கும் தந்தையின் பெயரில் எந்தப் பிள்ளைக்கும் பெரிதாக பாசம் இருக்காது. பாசம் இருக்காது என்று சொல்வதை விட, பாசம் இருந்தாலும், அப்பா நம்மை கவனிப்பதில்லையே என்று ஏக்கம் வர வாய்ப்புகள் அதிகம்.
  • ஆக, எல்லா காரியங்களிலும் கணவன் மனைவி சரி பாதி எடுத்துக் கொள்வதே சிறப்பாக இருக்கும்.

முத்து ஏழு:
மணி பார்த்து, சம்பளத்துக்காக வேலை செய்கிறவர்களின் பணி எப்போதும் சோபிப்பது இல்லை.

  • இது உண்மை. யாராக இருந்தாலும், எந்த வேலை செய்தாலும் அந்த வேலையில் ஒரு பிடிப்போடு, முழு ஈடுபாட்டோடு செய்தால் தானே சிறப்பாக இருக்க முடியும்?
  • எனக்கு பயிற்சி தர சமீபதில் கல்லூரிக்கு வந்த ஒரு பயிற்சியாளர் சொன்னார்,
எந்த வேலையைச் செய்வதற்கும் இரண்டே இரண்டு வழிகள் தான் உள்ளன, என்று. பிறகு அவை என்ன வழிகள் என்று எங்களைக் கேள்வி கேட்டார்.

உதாரணமாக நாளை ஒரு கட்டுரை எழுதி வரச் சொல்கிறார் உங்கள் ஆசிரியர், அதை செய்ய இரண்டே வழிகள் தான் உள்ளன என்றார். என்ன அந்த வழிகள் என்று அவர் கேட்டதும், நாங்கள் எல்லோரும், "ஒன்று செய்வது மற்றொன்று செய்யாமல் இருப்பது" என்றோம். சிலர், நாமே எழுதுவது, இன்னொரு வழி,மற்றவரைப் பார்த்து காப்பி அடிப்பது என்று சொன்னார்கள்.

அவர் சொன்னார், இல்லை, ஒரு வழி அழுது கொண்டே, புலம்பிக் கொண்டே செய்வது, மற்றொன்று ஆனந்தமாக ஏதோ நாம் இதில் இருந்து தெரிந்து கொள்ளப்போகிறோம் என்று செய்வது என்று சொன்னார்.

உண்மை தானே, எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் இந்த இரண்டு வழிகள் தானே இருக்கிறது? கவனிக்கவும், செயலைச் செய்வதற்குத் தான் இரண்டு வழிகளே தவிர, செய்யாமல் இருப்பதற்கு அல்ல!

ஆக, வீட்டு வேலையோ, வெளி வேலையோ, எந்த வேலை என்றாலும், ஆர்வத்தோடு செய்தால், ஆனந்தமாகச் செய்தால் தான் அதை சிறப்பாகச் செய்ய முடியும்!

முத்து எட்டு:
கணவனது பார்வையில், அடுத்து எனக்கு வாழ்க்கையில் தாழ்வு வரும்போது அதைத் தாங்கிக் கொள்ள எனக்கு தைரியம் சொல்பவளாக அவள் திகழ வேண்டும். அழகை விட, அறிவை விட, ஐசுவரியத்தை விட இதையே நான் முக்கியமாகக் கருதுகிறேன்".

உண்மை அழகான மனைவி அமைந்தவர்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள், பணம் நிறைந்த வீட்டில் பெண் எடுத்தவர்கள் எல்லாம், நிறைய பவுண் போட்டு வந்த மனைவி கிடைத்தவர்கள் எல்லாம் வரம் வாங்கி வந்தவர்கள் என்று சொல்ல இயலாது தானே?

ஏழைப் பெண்ணாக இருந்தாலும், புற அழகில் குறைந்தவளாக இருந்தாலும், அகம் அழகாய், தைரியசாலியாய் இருக்கும் பெண் அமைந்துவிட்டால், ஒருவன் புண்ணியம் செய்தவன் என்று தானே சொல்ல வேண்டும்?

கணவனும் தைரியமாக இருப்பது அவசியம். தைரியம் என்பது ஆண்களுக்கு மட்டுமே உருயது என்று இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆண், பெண், இருவருக்கும் தேவை.

தோல்விகள் வாழ்வில் எல்லோரையும் ஒரு நாள் வருடத் தான செய்யும்? அதோ, அப்படி ஒரு நாள் வரும் போது, கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் தைரியம் சொல்பவராக இருக்க வேண்டும்.

பிள்ளைகளையும் தைரியசாலிகளாக வளர்ப்பது பெற்றோரின் கடமை தானே? ஒரு பிள்ளையின் குணங்கள் யாவும் அம்மா அப்பா இவர்களிடம் இருந்து தான் வருகின்றன. பெரும்பாலான சமயங்களில் நல்ல ஒற்றுமையான தம்பதிகளின் பிள்ளைகள் சிறப்பனவர்களாக இருக்கிறார்கள்.

பிள்ளைகளின் குணம் பெற்றோரின் வளர்ப்பில் தான் இருக்கிறது என்பதற்கு என்னால் ஒரு நல்ல உதாரணம் சொல்ல இயலும். உதாரணம் வேறு யாரும் இல்லை, நான் தான்.

என் அப்பாவிற்கு சிறு வயதில் இருந்தே விளையாடும் பழக்கம் கிடையாது. எனக்கும் இதுவரை விளையாடும் பழக்கமே கிடையாது. விளையாட்டு என்றால், மட்டைப் பந்து, கூடைப் பந்து இப்படி.

அப்பாவிற்கு மேடைப் பேச்சு, எழுதுவது இதில் எல்லாம் ஆர்வம். நிறைய படிப்பார். விளையாடுவது இல்லை ஆனால், அது ஏன் என்று எனக்கும் தெரியாது.

ஆனால், நான் ஏன் விளையாடுவது இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும். இது வரை என்னிடம் நிறைய போட்டியில் வென்றதற்கான சான்றிதழ்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு சான்றிதழ் கூட விளையாட்டுப் போட்டியில் வென்றேன், பங்கெடுத்தேன் என்று கிடையாது!

எல்லா சான்றிதழ்களுமே, நடனம், பேச்சுப் போட்டி, கவிதை, கட்டுரை, பாட்டுப் போட்டி இப்படித் தான் இருக்கின்றன.

என் அப்பாவிற்கு இவற்றில் ஆர்வம் இருந்ததால் எனக்கும் ஏற்பட்டதா என்று யோசித்தால், ஆம் எனலாம். ஏன் என்றால், நான் பேசப் போகிறேன் என்று சொன்ன போது, "சரி, பேசு", என்று சொன்னார் என் தந்தை.

எனக்கு பேசுவதற்காக ஒரு பத்தி எழுதிக் கொடுங்களேன் என்று நான் சிறுவயதில் கேட்ட போது, "முடியாது, நீ பேச நீ தான் எழுத வேண்டும்" என்று சொல்லிவிட்டார்.

இதோ இன்று என்னால் ஒரு தலைப்பில் பேசு என்றால், உடனே பேச முடியும், காரணம் என் அப்பா என்னை வளர்த்த விதம் தான் எனலாம். அன்று எனக்கு எழுதிக் கொடுத்துப் பழக்கி இருந்தால், இன்றும் நான் பேசுவதற்கு எழுதிக் கொடுக்க ஒரு ஆளைத் தேடிக் கொண்டு நின்றிருக்கும் நிலை இருந்திருக்கலாம். மேலும் பேசும் கருத்து என்னுடையது எனும் போது, இன்னும் சிறப்பாக இருக்கும் என் பேச்சு!

அது சரி, நான் ஏன் விளையாடுவதில்லை? உண்மை, நான் சிறுவயதில் இருந்து விளையாடியதே கிடையாது பெரிதாக. காரணம்? 

காரணம், அப்பாவிற்கு என் மீது இருந்த அளவு கடந்த பாசம் தான். வீட்டை விட்டு பக்கத்து வீட்டிற்கு விளையாடச் சென்றால் கூட சிறுவயதில், "மெதுவா போகணும், ஓடக் கூடாது, அடி பட்டுடும், மெதுவா விளையாடனும், உக்காந்து வெளையாடனும், ஜன்னல் மேல எல்லாம் ஏறக் கூடாது, விழுந்துடுவ, வலிக்கும்", இப்படி என் அப்பா என்னை ஓடக் கூட விடுவதில்லை! அதனாலோ என்னவோ, விளையாடுகிறேன் என்று சென்றால் கூட, பந்தை என்னை நோக்கி யாராவது தூக்கிப் போட்டால், எங்கே என் மீது பந்து விழுந்து அடி பட்டுவிடுமோ என்று ஓடி வந்துவிடுவேன்.

பல்லாங்குழி, பாம்புத் தாயம், கண்ணாமூச்சி, செஸ், கேரம், இவை தான் நான் விளையாடும் விளையாட்டுக்களில் சில. எந்த விளையாட்டில் அடிபடாது என்று நான் தேடிக் கண்டுபிடித்து விளையாடும் விளையாட்டுக்கள் இவை எல்லாம்!

ஆக, பிள்ளைகளை தைரியமாக வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு பெரிதாக இருக்கிறது. 

முத்து ஒன்பது:
இன்பத்திலும் துன்பத்திலும் உடன் இருந்து மன உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவே மனைவி இருக்கிறாள். இந்த உண்மையை எந்தக் கணவனும் மறந்து விடக் கூடாது. அவன் அப்படி மறக்கும்படி எந்த மனைவியும் நடந்து கொள்ளக் கூடாது!

  • எந்த மனைவியும் தயாராக இருப்பாள், கணவனின் சோகங்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள. சமாதானம் சொல்ல, ஆறுதலாய் இருக்க, அவளால் முடியும். ஆனால், அவளுக்கும் சில நேரம் தாங்க இயலாத சோகம் வரலாம். அப்போது கணவனும் அவளுக்கு ஆறுதலாய் இருக்க வேண்டும் தானே?
  • இதிலும் அந்தப் பகிர்வு இருக்க வேண்டும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொள்வது அவசியம்.
  • இதே போல, பிள்ளைகளுக்கும் ஆறுதல் சொல்ல, தட்டிக் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். எந்த ஒரு பிள்ளைக்கு பெற்றோரிடம் தனது சோகத்தைச் சொன்னால் அது தீரும் என்கிற நம்பிக்கை இருக்கிறதோ, அந்தப் பிள்ளையால் உறுதியாக எந்த காரியத்தையும் சிறப்பாகச் செய்ய இயலும்.
உதாரணமாக, யாரோ ஒருவன் தெருவில் செல்லும் போது தினமும் பயங்கரமாக ஒரு பெண்ணை கேலி செய்கிறான் என்றால், இதை வீட்டில் சொன்னால் பெற்றோர் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை பிள்ளைக்கு இருக்க வேண்டும்.

அந்த நம்பிக்கை இல்லாத போது தான் எல்லா பிரச்சனைகளுமே ஆரம்பம் ஆகின்றன.

ஏங்கே வீட்டில் சொன்னால், தன்னை ஏதும் திட்டுவார்களோ என்று பயம் கொஞ்சம் இருந்தால் கூட, பிள்ளை அதை வீட்டில் சொல்லமாட்டாள்.

ஏன், நானாக இருந்தாலும், அப்படி பயம் இருந்தால், சொல்லமாட்டேன் தான்! நல்லவேளை என் வீட்டில் அப்படி இல்லை!

  • சோகத்தைப் போக்குபவர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டுமே தவிர, சோகத்தை உருவாக்கும் கருவியாக அல்ல.
  • சில பெற்றோர் இருப்பார்கள், பிள்ளை நன்றாகப் படிக்க வேண்டும் என்று குறைந்த மதிப்பெண் வாங்கினால் அளவுக்கு மீறி திட்டுவது, அடிப்பது என்று.
  • படிக்க வேண்டும் என்று சொல்வதில் தவறில்லை, ஆனால், நன்றாக படிக்கும் ஒரு பிள்ளை, ஏதோ ஒரு பரிட்சையில் குறைந்த மதிப்பெண் வாங்கியது என்கிற காரணத்திற்காக அதிகமாய் திட்டுவது, நீ உருப்படவேமாட்டாய் என்பது போலத் திட்டுவது, கூடாது தானே? நன்றாகப் படிக்கும் பிள்ளை என்றால், ஏதோ ஒரு பரிட்சையில் மதிப்பெண் குறைந்து இருந்தால், அது அந்தப் பிள்ளைக்கே சோகமாகத் தான் இருக்கும். இதை பெற்றோரிடம் சொன்னால், அவர்கள் ஆறுதல் சொல்வார்கள், தட்டிக் கொடுப்பார்கள் என்றால் தான் அந்தப் பிள்ளைக்கு சொல்லவே மனம் வரும்.
  • அப்படி அந்தப் பிள்ளை சொல்லி, பெற்றோர் திட்டி விட்டால், மறு முறை எந்த ஒரு தோல்வியாக இருந்தாலும் அதைப் பகிர்ந்து கொள்ள, பெற்றோரைத் தேட மனம் வரவே வராது அந்தப் பிள்ளைக்கு. இதனால் தான் இன்று நிறைய பிள்ளைகள் நண்பர்களிடம் நெருக்கமாக இருக்கும் அளவுக்கு பெற்றோரிடம் இருப்பதில்லை.
  • பெற்றோர் தீமை நினைப்பதில்லை தான், ஆயினும், இது போன்ற சூழலில் பிள்ளைகளைப் புரிந்து கொள்வது அவசியம்.
  • இதே புரிதல் அவர்களுக்கு நடுவேயும் இருத்தல் மிக மிக அவசியம்.

முத்து பத்து:
மனைவி ஒரு சுமை தாங்கி, கணவன் தனது மனச் சுமையை இறக்கி வைக்க அவள் இடம் தர வேண்டும்!!!!

அட, இப்படி சொன்னால், இது சரியாக இருக்காது. இந்த சுமை தாங்கி கருத்தோடு உறுதியாக நான் ஒத்துப்போக மாட்டேன். இங்கு மனைவி சுமை தாங்கி என்று சொன்னால், சுமை, சோகம், இதை அவள் மட்டுமே சுமக்க வேண்டும் என்று தானே பொருள் வருகிறது?

அப்படி ஒரு கருத்து அம்மா அப்பா இருவரிடமுமே இருக்கக் கூடாது!

ஆனால், யாராவது ஒருவர் அதிகம் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் அவசியம் ஏற்படத்தான் செய்யும். அதில் தவறில்லை, ஆனால் எல்லா நேரமும் ஒருவரே எல்லா பொறுப்புகளையும், கவைகளையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றால் அது நியாயம் இல்லை தானே?

சில வீடுகளில், அப்பாவிற்கு அம்மா கால் பிடித்துவிடுவார், ஆனால் அப்பா ஒரு போதும் இதைச் செய்வது கிடையாது! அம்மாவிற்கு உடல் நிலை சரி இல்லை என்றாலும் கூட இது போன்ற சிறு சிறு விஷயங்களை அப்பா செய்ய முன் வருவதில்லை!

காரணம்? ஏதோ பெண் ஆணிற்குக் கீழ் என்கிற எண்ணம் சிறுவயதில் இருந்தே சொல்லிக் கொடுக்காமலே, செயல்களால் உணர்த்தப்பட்டு வரும் சமுதாயமாக நமது சமுதாயம் இருந்து வருகிறது. 

இது தான் காரணம், கணவனுக்கு பாசமாக மனைவியால் செய்ய முடிந்த இது போன்ற சில விஷயங்களை, என்ன தான் பாசம் இருந்தாலும் கணவனால் செய்ய முடிவது இல்லை!
--------------------------------------------------------------------
அடுத்த பதிவில் தொடர்ந்து மேலும் ஐந்து முத்துக்களைப் பார்க்கலாம்!


கருத்துகள்

  1. good one kannu..but romba perusaa irukku padikka
    basically I am a somberi :p

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) :) எப்டியோ படிச்சியே! அப்போ நீ சோம்பேறி இல்ல!

      நீக்கு
  2. , ஒரு வழி அழுது கொண்டே, புலம்பிக் கொண்டே செய்வது, மற்றொன்று ஆனந்தமாக ஏதோ நாம் இதில் இருந்து தெரிந்து கொள்ளப்போகிறோம் என்று செய்வது”

    முத்துகள் அனைத்தும் ஜொலிக்கின்றன ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) மிக்க நன்றி! உங்களைப் போன்றோர் வாசிப்பதால் தான் முத்துக்களுக்கு மகிமை!

      நீக்கு
  3. முத்து 8 -ல் "தைரியம் சொல்பவலாக அவள் திகழ வேண்டும்." கண்மணி , கவனிக்க.
    "பிள்ளைகளையும் தைரியசாலிகளாக வளர்ப்பது பெற்றோரின் கடமை தானே? " இது உங்கள் பேச்சு நடை எழுத்தில் வருவது அழகு. இனி எழுதும் பொழுதும் ஆங்காங்கே தெளித்து விடுங்கள். திருப்பூரில் " குழந்தைகளை உற்சாகப் படுத்த கை தட்டலாமே" என்று சொன்னது போல் இருக்கிறது. நாம உங்கள மாதிரில்லாம் இல்லேங்க... உங்களுக்கு தந்தை, எனக்கு என் தாத்தா ... தலைப்பு மாற்றம் சரிதான், முந்தைய தலைப்பு ஏதோ அறிவுரை சொல்ல முற்படுவது போல் தோன்றியது. புதியது- அனுபவம் போல் தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) :) கவனிச்சுட்டேன். இப்படி எப்பவும் சின்ன சின்ன பிழைகள், பெரிய பெரிய பிழைகள் எல்லாம் சொல்லுங்க! நன்றி!

      தெளித்து விடலாமே! :)

      நீக்கு
  4. //பிள்ளைகளின் குணம் பெற்றோரின் வளர்ப்பில் தான் இருக்கிறது என்பதற்கு என்னால் ஒரு நல்ல உதாரணம் சொல்ல இயலும். உதாரணம் வேறு யாரும் இல்லை, நான் தான்.// நானும் தான். :-) இந்த பதிவு எனக்கு மிக மிக பிடித்திருக்கிறது.. தொடர்ந்து பதியுங்கள்.. வாழ்வில் அன்றாடம் நடக்கும் விசயங்களை மீண்டும் நம் மனதில் ஓட்டிக்காட்டுகிறது.. வாழ்த்துக்கள் கண்மணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) ம்ம் இன்னும் நாற்பது முத்துக்கள் மீதம் இருக்கின்றன! தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி! :)

      நீக்கு
  5. செய்யும் வேலையில் ஆர்வம் இருப்பின் சுமையாக இருக்காது! சிறப்பான அறிவுரை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்