முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் சென்னம்மா!(அப்பாவுக்குத் தெரியாதா #3)

”ஏம்பி, ஏம்பி, கொண்ட போட்டுவிடு...”, இப்படித் தான் அடம்பிடித்துக் கொண்டு இருப்பேன் சிறு வயதில். என் அம்மாவை நான் ஏம்பி, அதாவது, "எலும்பி" என்று தான் அழைப்பேன், காரணம், அவர் மிகவும் ஒல்லியாக இருந்த்தார் (ஆனா, இப்போ இல்ல :) ) கொஞ்சம் கூட மரியாதையாகவே அழைக்கமாட்டேன் என் அம்மாவை அப்போதெல்லாம், இப்பொழுது தான் “அம்மா வாங்க, போங்க..” என்று. வா போ, நீ தான், சிறு வயதில். இப்போதும் சில சமயம்..., இல்லை, பல சமயம் அம்மாவை “குண்டு பேபி”, என்று அழைப்பதுண்டு.  ஆனால், அப்பாவை மட்டும் சிறு வயதில் இருந்தே “வாங்க, போங்க” என்று தான் அழைத்ததாய் ஞாபகம், பிறகு, “அப்பாக்குட்டி” என்று சொல்வேன் என் அப்பாவை ஆசையாய்!
cute

அப்போது, எனக்கு ஆண் பிள்ளைகளைப் போல, “பாய் கட்” செய்துவிட்டு இருந்தார்கள் என் வீட்டில்! ஐந்து, ஆறு வயது இருக்கும்! ஆனாலும், குளித்து முடித்தவுடம் எனக்கு ஈரத் தலையில் கொண்டை போட வேண்டும். என் அம்மாவிடம் அழுவேன், என் அம்மாவும் துண்டை வைத்து தலையில் கொண்டை போட்டுவிடுவார்.

அந்தக் கொண்டை போட்டவுடன் எனக்கு வருமே ஒரு ஆனந்தம்! ஓடுவேன், என் அவ்வாவிடம் (பாட்டியை நான் அவ்வா என்று தான் அழைப்பேன் - தெலுங்கு), அவரும் கொண்டை போட்டு இருப்பார், அவர் கொண்டை சிறியதாக இருக்கும், நான் அவரிடம் இப்படிச் சொல்வேன், “பாத்தியா அவ்வா, உன் கொண்டைய விட என் கொண்ட பெருசு...”, இப்படிச் சொல்லி, சிரிப்பதில் எனக்கு அத்தனை இன்பம்! 

என் தாத்தாவிடம் ஓடுவேன், “தாத்தா... எனக்கு அவ்வாவவிட பெரிய கொண்ட...”, சொல்லிவிட்டு என் கொண்டையை ஆட்டிக் காட்டுவேன்! அவர் தன் பொக்கை வாய் எழுர் தெரிய என்னைப் பார்த்துப் பாசமாய் சிரிப்பார்!

கண்ணாடி முன் நின்று என் கொண்டையைப் பார்த்துப் பார்த்து சிரித்துக் கொள்வேன். நீளமான முடி என்று துண்டை தலையில் தொங்கவிட்டு, முன்னும் பின்னும் போட்டுப் பார்த்துக் கொள்வேன்! (ஆனால், இப்போது என்னவோ நீளமான முடி மீது இருந்த்த ஆசை போய்விட்டது!)

இத்தனை சேட்டைகளும் செய்து சிரித்துக் கொண்டு இருக்கும் போது, என் அப்பா வருவார். “அப்பா.... பாத்திங்களா... நான் கொண்ட போட்ருக்கேன்...”, கத்திக் கொண்டே சென்று அப்பா மீது ஏறிக் கொள்வேன்.

என் அப்பா என்னைக் கொஞ்சிவிட்டு, “சென்னம்மாக் கெழவி” மாதிரியே இருக்கு”, என்று சொல்வார். என்னை பல முறை அவர் அப்படிச் சொல்வதுண்டு. சென்னம்மா என்பது என் அப்பாவின் பாட்டி, நான் அவரைப் பார்த்ததில்லை!

“கெழவி”, என்று சொன்னதும், நான் என் கொண்டையை அவிழ்த்துவிடுவேன். என்னைக் ”கெழவி” என்று சொன்னால் எனக்குப் பிடிக்காது, யாருக்குத் தான் பிடிக்கும்? ஆனாலும் என் அப்பா, ஒவ்வொரு முறை நான் கொண்டை போட்டு, தலையில் ஈரத் துண்டைப் போட்டு அழகு பார்க்கும் போதும், என் ஆனந்தத்தைக் கெடுப்பது போல, என்னை, “சென்னம்மாக் கெழவி”, என்று சொல்லி வெறுப்பேற்றி, கொண்டையைக் கழற்ற வைத்துவிடுவார்!

அப்போதெல்லாம் எனக்கு அப்பா மீது கோபமாக தான் வரும்! ஆனால், இப்போது தான் என் அம்மா சொன்னார் ஒரு நாள், ”ஏம்மா, அப்பா என்ன கொண்ட போட்டு சந்தோஷமா இருந்தப்போலாம், இப்டி செஞ்சாங்க?” என்று கேட்டபோது.


”உனக்கு சளி அடிக்கடி புடிச்சுக்கும், அதான் ஈரத் துண்ட வச்சு வெளையாண்டா சேராதுனு...”, அப்போது தான் புரிந்த்தது, ”எந்த ஒரு சின்ன விஷயமாக இருந்த்தாலும் அதில் அப்பா எனக்கு இருக்கும் நல்லது கெட்டது எல்லாமே யோசிப்பார்”, என்று! அப்பாவுக்குத் தெரியாதா என்ன?

இன்றும் சில நேரம் காலையிலேயே நான் குளிக்கவில்லை என்றால் என் அப்பா சொல்வார், “குளிக்காம சென்னம்மாக் கெழவி மாதிரி இருக்க”, என்று. நான் சிரித்துக் கொண்டே குளிக்கச் சென்றுவிடுவேன்!

நான் பிறந்த போது, ஒரு கிலோ 900 கிராம் தான் இருந்தேனாம். மிகவும் ஒல்லியாக இருந்தேனாம். மருத்துவர்கள் எல்லாம், மூளை வளர்ச்சி இல்லையோ என சந்தேகப்பட்டார்களாம்! குறை மாதக் குழந்தை போல பிறந்த என்னை யாரும் தூக்கிக் கொஞ்சக் கூடத் தயங்குவார்களாம். பார்க்கவே சகிக்காதது போல இருந்தேனாம்! ஆனாலும், அப்போதும், என் அப்பாவிற்கு நான் இளவரசியாகத் தான் இருந்திருக்கிறேன்! நான் சிறுவயதில் பேசியதை எல்லாம் பதிவு செய்து வைத்து இருக்கிறார்! :) 

இப்போதும் இளவரசியாகத் தான் இருக்கிறேன் அவருக்கு. “நிலா அரசனின் மகள் நான்”,  என்று பெருமையாக சொல்லிக் கொள்வேன். ஆம், நான் நிலா அரசனின் மகள் தான்! என் அப்பாவின் பெயர், ”சந்திர ராஜன்”, அதாவது நிலாவின் அரசன்!
Dad's girl!

இப்போது நான் நன்றாகப் படிக்கும் போது, போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கி வரும் போது, என் அப்பாவோடு செல்லமாக சண்டை இடும் போதெல்லாம் என் அப்பா என்னைப் பார்த்து சொல்வார், “நல்லா, 1.900 பொறந்துட்டு, இப்போ இது போடுற போடப் பாரேன்..”, என்று என் அம்மாவிடம்! அந்த வார்த்தைகளில் என்னால் எப்போதும் சந்தோஷத்தைப் பார்க்க முடியும்!

எப்போதும் இந்த சந்தோஷம் வேண்டும்!

-------------------------

இந்தப் பதிவு எப்போதும் என் பிரியம், என் அப்பாக் குட்டிக்காக! இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்! :) :) :)

கருத்துகள்

  1. ரசித்தேன்...

    தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்! :) :) :)

    பதிலளிநீக்கு
  3. //நான் பிறந்த போது, ஒரு கிலோ 900 கிராம் தான் இருந்தேனாம். மிகவும் ஒல்லியாக இருந்தேனாம்.//
    இப்போதும் அவ்வளவு தானோ என்று தோன்றுகிறது.
    அப்பாவின் செல்ல மகளுக்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) அம்மா அப்படி எல்லாம் இல்லை, இப்போது நான் நிறைய வெயிட் இருக்கேன் :) நன்றி...!

      நீக்கு
  4. மிக நல்ல நினைவுகள்.. இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.. இன்னைக்கு எங்க அப்பாட்ட, “எப்பா ஹேப்பி ஃபாதர்ஸ் டே” என்றேன்.. “டேய் லீவு அன்னைக்காவது தூங்க விட்றா” என்று திரும்பி படுத்துக்கொண்டார்.. பெற்றவர்களுக்கு வார்த்தை அலங்காரங்கள் எல்லாம் தேவையில்லை.. அவர்கள் கஷ்டப்பட்டதால் தான் நாம் கஷ்டப்படாமல் இருக்கிறோம்..
    இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) இந்தப் பதிவை நான் என் அப்பாவுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் :) உண்மை தான் அப்பாவுக்கு எப்போதும் வார்த்தை அலங்காரங்கள் தேவை இல்லை!

      நீக்கு
  5. அருமையான நினைவுகள்..வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. நீங்க, கி.ரா எழுதின கோபல்ல கிராமம் கதை படித்ததுண்டா, அதில கதை சென்னம்மா என்ற பெண் பற்றிய கதை தான், வைரமுத்துவின் கருவாச்சி காவியம் மாதிரி இங்கே சென்னம்மா தெய்வமாய் வணங்குவார்கள்... படித்துப் பாருங்கள், உணர்ச்சி மிக்க நாவல்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்