மலையில் பயணமும்,
மழையில் குளியலும்,
என்று தொடங்கிய
மழலை நாட்கள்;
என் ஆறு மாதத்தில்,
வசந்தமாய் இருந்து,
அழகாய் உன் தோளில்,
தூங்கிக் கழித்த நாட்கள்;
பொம்மை வாங்கிய நாட்கள்,
பேனா பிடித்து - எழுதப்
பழகிய நாட்கள்;
எட்டு வைத்த நாட்கள்,
என்னை நீ
குட்டு வைத்த நாட்கள்;
முறுக்கு நொறுக்கியபடியே,
நாம் இடியாய் சிரித்த,
இன்ப நாட்கள்;
கடற்கரை மண்ணில்,
கடலலையாய், அப்பா - நாம்,
கட்டி உருண்ட நாட்கள்;
என்றோ பெய்த
ஏப்ரல் மாத மழையில்,
நாம் நனைந்த,
ஏகாந்த நாட்கள்;
பல் வந்த புதிதில்,
நான் கடிக்க,
வலித்தது போல,
நீ நடிக்க,
நான் சிரிக்க,
அந்த அற்புத நாட்கள்;
பள்ளியில் சேர்க்க,
பாவமாய் நீ,
பனியில் நனைந்த,
பாசம் நிறைந்த நாட்கள்;
முதல் நாள் அம்மா
வேலைக்குச் சென்றதும்,
பாவம் - தனியாய் என்னை நீ,
பார்த்துக் கொண்ட நாட்கள்!
இப்படி என் நினைவில்,
நிறைந்து கிடக்கும்,
எத்தனை எத்தனையோ,
உயிர் நிறைக்கும் நாட்கள்;
எப்போதும் வேண்டும்,
இதே இனிமையோடு,
எந்நாளும் வேண்டும்!
என் அப்பா - நீ,
என்னோடு வேண்டும்,
இறுதி வரை வேண்டும்!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நான் பார்த்த அப்பா - மகனின், இனிமையான நொடிகள்!
இனிய நினைவுகள் அருமையாக வரிகளில்... பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குதங்களது தந்தைக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி... :) இது எனது நண்பரையும் அவரது மகனையும் வைத்து எழுதிய கவிதை!
நீக்குமென்மையான வரிகள்... வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிக்க நன்றி... :)
நீக்கு