முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நானும் நார்த் இந்தியனும் #3

இது ஒரு தொடர் பதிவு! முந்தைய பதிவை இங்கே படிக்கலாம் - நானும் நார்த் இந்தியனும்! #1 #2

இரவு சீக்கிரம் தூங்கிப் பழகிய நான், அந்தப் பெண்ணோடு சேர்ந்து நேரம் கழித்து உறங்கப் பழகிக் கொண்டேன். இரவின் அழகை ரசிக்கக் கற்றுக் கொடுத்தாள் எனக்கு அவள் தான். "எத்தனை குளிர்!", என்று இழுத்துப் போர்த்தி உறங்கிவிடுவேன் நான் இரவு பத்து பதினொறு மணிக்கெல்லாம். ஆனால், சில நாட்களிலேயே இரவு பத்து பதினொறு மணி வரை வேலை இருந்தது ஆய்வுக் கூடத்தில், நேரம் கழித்து தான் அறைக்கே வருவேன்.

சிறிது நேரம் இருவரும் பேசிக் கொண்டு இருப்போம். அப்படிப் பேசிக் கொண்டு இருக்கையில் ஒரு நாள், காதல் பற்றி பேச்சு வந்தது. அவள் சொன்னாள், "இங்கு திருவனந்தபுரத்தில் எல்லாம், நிறைய ஜோடிகளைப் பார்க்கவே முடியவில்லையே, தென் இந்தியாவில் எல்லாம் காதலிக்க மாட்டார்களோ நிறைய பேர்?", என்று.

நான் சொன்னேன், "அப்படி எல்லாம் இல்லை, இங்கு தான் அதிகம் அப்படிப் பார்க்க முடியவில்லை, சென்னையில் எல்லாம் நான் பார்த்து இருக்கிறேன் நிறைய" , என்று. அவள் சொன்னாள், "ஆனாலும் எங்கள் ஊரை விட இங்கு குறைவு தான், அங்கு எல்லாம் சர்வ சாதாரணமாக ரோட்டில் முத்தம் கொடுப்பார்கள்", என்று! “என்னது???”, என்றேன், அவள், அதெல்லாம் அங்கு சகஜம் என்றாள், கண்ணடித்து! “ஓ...”, என்று கேட்டுக் கொண்டேன் நான்!

இப்படிக் கதை எல்லாம் பேசி விட்டு, இருவரும் இரவு ஒரு மணிக்கு தேநீர் தயார் செய்வோம், பிறகு, ரஸ்க், தேநீர், சாப்பிட்டுக் கொண்டே மீண்டும் ஒரு மணி நேரம் பேசுவோம். பேச்சு, பல நேரம் அவளது வாழ்வில் நடந்த நிகழ்வுகள், என் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் என்று தான் இருக்கும்.

Tea and Rusk - A good combination when you chit chat!


அவளுக்கும் எனக்கும் நிறைய வித்யாசங்கள் உண்டு. நம் ஊரில் பெரும்பாலும், பிள்ளையைப் பள்ளியில் சேர்ப்பது என்றால் அடுத்த ஊர், அடுத்த மாவட்டம் இப்படித் தான் சேர்ப்பார்கள். என் அப்பா எல்லாம், கல்லூரியே என்னை வேறு ஊரில் சேர்க்கமாட்டேன் என்று அடம்பிடித்துவிட்டார், பிள்ளை அருகிலேயே இருக்க வேண்டுமாம், அதுவும் பெண் பிள்ளை வேறு, சொல்லவா வேண்டும்?

ஆனால், இவளோ, பள்ளியே வேறு ஒரு மாநிலத்தில் படித்து இருக்கிறாள், ஆறாம் வகுப்பில் இருந்து தனியாக விடுதியில் தான் இருந்தாளாம்! அதற்கு முன்பும், அப்பா மட்டும் தான் உடன் இருந்தார்களாம், அம்மா இவள் படிக்க நிறைய செலவாகும் என்பதால், பணம் தேவை என்ற காரணத்தால், வேறு மாநிலத்தில் வேலை பார்த்தார்களாம்!

"நான் அம்மா கூட இருந்ததே இல்லை, ரொம்ப கொஞ்ச நாள் தான் இருந்திருக்கேன்", என்று ஏக்கமாகச் சொன்னாள்! "அப்பா தான் எனக்கு எல்லாமே", என்றாள்.

இப்படி வீட்டை விட்டு சிறுவயதில் இருந்தே தனியாக இருந்து பழகி இருந்ததால், தைரியசாலியாக, எதையும் எதிர்கொள்ளும் துணிவு என்னை விட அவளிடம் அதிகம் இருந்தது. என்னை விட, அதிகம் அவளால் சுதந்திரமாக செயல்பட முடியும், என்னை விட சின்னப் பெண் என்றாலும்.
தனியாக வெளியே சென்று எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லை, கொஞ்சம் தயக்கம் இருக்கும் எனக்கு, தனியே நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்றால், காரணம், கடைக்குப் போக உடன் அப்பா, பள்ளிக்குப் போக உடன் அம்மா, அடுத்த தெருவுக்குப் போக உடன் தம்பி, இப்படி எந்நேரமும் என்னைப் பாதுகாக்கிறேன் என்று, தனியாக என்னால் எதையும் செய்ய தைரியம் இல்லாத அளவிற்கு என் வீட்டில் வளர்த்துவிட்டார்கள்.

அவளது தைரியத்தை நான் பல நேரம் வியந்து பார்த்தேன்! இவள் மட்டும் அல்லாமல் மேலும் நிறைய வட இந்திய, என் வயதொத்த பெண்களும், என்னை விட தைரியம் கொண்டவர்களாகவே இருந்தார்கள். இது ஒரு பெரும் வித்தியாசம் என்று எனக்குப்பட்டது. அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன், தைரியமாக இருக்க! :)

பிறகு பெப்பர் ஸ்ப்ரே (pepper spray) என்கிற ஒன்றே, அவள் சொல்லித் தான் எனக்குத் தெரியும். வெளியே தனியாகச் செல்லும் போது, தில்லியில் பையில் எப்போதும் இதை வைத்துக் கொள்ள வேண்டும், யாரேனும் வம்பு செய்தால், அடித்து விட வேண்டும் என்றாள், “அப்படியா...??? “, என்று கேட்டுக் கொண்டேன். பிறகு அவளே சொல்லிக் கொண்டாள், தென் இந்தியாவில் எல்லாம், அதுவும், உங்களது ஊரில் எல்லாம் இது தேவை இல்லை, நீங்கள் இருக்கும் இடம் மிகவும் பாதுகாப்பானது என்று.

ஆம், உண்மையில் நம் ஊர் எல்லாம் தங்கம்!

பிறகு பல நேரங்களில் அறிவியல், ஆராய்ச்சி சார்ந்து இருக்கும் எங்களது விவாதங்கள், கலந்துரையாடல்கள்! அதெல்லாம் இங்கே சொல்ல முடியாது பாருங்கள்!

உடனே, ”என்னடா இது, இவள் எப்போதும் படிக்கும் பெண்ணோ?”, என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள்! படிப்பு தவிர்த்து வேறு விஷயங்களும் பேசுவோம் நாங்கள்! என்ன அது? இரண்டு வயசுப் பிள்ளைகள் பேசினால், கல்யாணம், காதல் பற்றி எல்லாம் பேசாமல் இருப்பார்களா?

நாங்களும் பேசினோம், அதைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்!

இன்னிக்கு ரொம்ப டயர்டா இருக்கு, அதனால இன்னொரு நாள் எழுதறேன் :) 

கருத்துகள்

  1. பெப்பர் ஸ்ப்ரே மாதிரி இன்னும் நிறைய பொருட்கள் இருக்கின்றன கண்மணி ! ,இது பற்றி ஒரு பதிவு எழுத யோசித்திருக்கேன் !!
    //இரண்டு வயசுப் பிள்ளைகள் பேசினால், கல்யாணம், காதல் பற்றி எல்லாம் பேசாமல் இருப்பார்களா?//

    :) :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அந்தப் பொன்னு அதெல்லாம் சொல்லித் தரலயே! :(
      பதிவு எழுதிட்டு எனக்கு இணைப்பு மின்னஞ்சல் அனுப்புங்க?

      :) :) நன்றி!

      நீக்கு
  2. உங்களை தனியா எதுவும் செய்ய, எங்கேயும் போக பழகலைனு சொன்னிங்க, ஆனா ஒவ்வொரு பதிவிலயும் எப்படி இந்த பொன்னு இந்த கோணத்துல வாழ்க்கைய பார்க்குதுனு யோசிச்சதுண்டு, நானும்தான் நார்த் இண்டியன்ஸ் கூட படிச்சேன், 8 பேர் கூட தங்கி சுத்திருக்கேன், இது மாதிரிலாம் எனக்க யோசிக்க தோணலை, ஒருவேளை பசங்க எல்லா ஊர்லயும் ஒரே மாதிரி தான் இருக்கமோ? அதான் வித்தியாசம் தெரியலையா? இந்த தொடர் பதிவு நல்லாருக்கு, வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) அப்படியா, பசங்கள பத்தி எனக்குத் தெரியலையே! ஆனா, ஒவ்வொரு ஊர்ல இருக்க்வங்களும் ஒரு ஒரு மாதிரி தான் இருப்பாங்க இல்லையா? பழக்கம் வேறு வேறா தானே இருக்கும், ஒற்றுமைகள் இருந்தாலும்?

      மிக்க நன்றி :) தொடர்ந்து படிங்க நேரம் இருந்தால்!

      நீக்கு
  3. தொடர் பதிவு நல்லாத்தான் இருக்கு... சென்னையில் சந்திப்போம் ...

    பதிலளிநீக்கு
  4. நாம் பிள்ளைகளை வளர்க்கும் விதமும் வட இந்தியாவில் அவர்கள் வளர்க்கும் விதமும் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது! நாம் குழந்தைகளை ரொம்பவும் பொத்திப் பொத்தி வளர்க்கிறோமோ என்று இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. நல்ல அனுபவ பதிவு...
    தொடர் நாடகம் எடுக்கின்ற எண்ணம் உங்களுக்கு இருக்கின்றதென்று உங்கள் எழுத்துப் பயிற்சியிலிருந்து எனக்கு தோன்றுகின்றது..

    பதிலளிநீக்கு
  6. நம் ஊர் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மீது மிகவும் possessiveness இருக்கும்... அதே போல் பிள்ளைகளை வெறும் உயிராக மற்றும் பார்க்காமல், குடும்ப பொறுப்பு, கௌரவம், என எல்லாவற்றின் வளர்ந்து வரும் உருவமாக அந்த பிள்ளைகளை பார்க்கிறார்கள்.. என்ன செய்வது? ஆனால் இதுவும் நல்லது தான்.. ஆனால் உண்மையில் மனதைரியம் நம்மவர்களை விட வட இந்தியர்களுக்கு கம்மி தான்.. அதுவும் பெண்களுக்கு ரொம்ப ரொம்ப கம்மி..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்