முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பட்டணம் போனேனா....

அது ஒரு பெரிய ”கடை”, கடை என்று சொல்வது பொருத்தமாக இருக்காது தான், ஆனால் பாருங்களேன், “மால்” என்பதற்குத் தமிழில் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை எனக்கு! அதனால், கடை என்றே வைத்துக் கொள்வோம்.

வெளியில் இருந்து பார்த்தாலே ஒரு பாதி நாள் பார்க்கலாம் போல, அவ்வளவு பெரி....ய கடை! வெளியே வந்து நின்றது ஒரு பெரிய கார், உள்ளே இருவர் மட்டும் தான் இருந்தார்கள். ஓட்டுனரையும் சேர்த்தால், மூன்று பேர்!

“கார பார்க்கிங்ல விட்டுடுங்க”, சொல்லியவாரே இறங்கினான் அவன். வயது ஒரு முப்பதிற்கு உள் தான் இருக்கும்.

இறங்கியவன், கையைப் பிடித்து உடன் வந்த தன் வயதான அம்மாவை இறக்கிவிட்டான். இருவரும் கை பிடித்தவாறு அந்தப் பெரிய கடையினுள் நுழைய நடந்தார்கள்.

அந்த அம்மா இது தான் முதல் முறை பட்டணம் வந்திருப்பார் போலும், ஒவ்வொரு ”இன்ச்சை”யும் சற்று வியப்பாகவே பார்த்துக் கொண்டு இருந்தார்.

”இது என்ன, அது என்ன..”, என்று தன் மகனிடம் குழந்தையைப் போலவே கேட்டுக் கொண்டு இருந்தார்.

அவனும், “அதுவாமா, அது வந்து...” என்று சிறுவயதில் தன் அம்மா தனக்குச் சொல்லித் தந்ததைப் போலவே மிகவும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டு இருந்தான்.

அங்கு வேகமாக ஓடிக் கொண்டு இருந்த யாரும் இவர்களைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஓடிக் கொண்டே இருந்தார்கள். ஆனால், இந்த மகனும் அம்மாவும் மாத்திரம் மெதுவாக ஒவ்வொன்றையும் ரசித்துக் கொண்டு இருந்தார்கள் அங்கே.

”அட, இந்தப் பூ எல்லாம் எத்தன அழகா இருக்கு இல்லப்பா?”, அந்தக் கடையின் ஓரமாக அழகுக்கு வைக்கப்பட்டிருந்த அந்தத் தொட்டிகளைக் காட்டினார் அவர் தன் மகனுக்கு. பல முறை இதே மாலுக்கு அவனும் வந்திருக்கிறான், ஆனால், அந்தப் பூத்தொட்டியை நின்று பார்த்ததும் இல்லை, ரசித்ததும் இல்லை!

இன்றுதான் அம்மா காட்டியதால் அதைப் பார்த்திருந்தான். “ஆமாம்மா... நல்லா இருக்கு, பாத்து வாம்மா, தர இங்க கொஞ்சம் வழுக்கும்...”, பூக்களை ரசித்துவிட்டு, பூக்கையை இன்னும் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான், எங்கே அம்மா விழுந்துவிடுவாளோ என்ற பாசத்தில்.


”ரசிப்பதற்காக, ரகம் ரகமாகப் பூக்கள் -
அங்கே அடுக்கி வைக்கப்பட்டு இருந்து என்ன பயன்?
இருவரைத் தவிர ஒருவரும் ரசிக்கவில்லை!”

மெதுவாக நடந்து வந்து கொண்டே இருந்தார்கள் இருவரும் ஒவ்வொன்றாக வேடிக்கை பார்த்தவாறே, ”சேல வாங்கலாம்மா உனக்கு, ரெண்டாவது மாடில இருக்கு...”, என்றவாரு அந்த எஸ்கலேட்டர் பக்கம் அழைத்துச் சென்றான் அம்மாவை.

இது வரை படிக்கட்டில் மட்டுமே ஏறிப் பழக்கம் அம்மாவிற்கு, அதுவும் சமீபமாக மூட்டு வழி வந்துவிடுகிறதென்று ஏறுவதே இல்லை.

”என்ன இது... படி ஓடுது???”, இப்படி வாய்விட்டே சொல்லிவிட்டார் அந்த அம்மா. பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஏதோ போல ஏளனமாக அம்மாவையும் மகனையும் பார்த்தார்கள், என்னவொ இவர்கள் எல்லாம் பிறக்கும் போதே நான்கு லிஃப்ட், ஐந்து எஸ்கலேட்டர் என்று கட்டிக் கொண்டு பிறந்தவர்கள் போல.

ஆனால், அவர்கள் யாரையும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை இந்த அம்மாவும் பையனும், “அம்மா, இதுல மெதுவ்வ்வா ஏறி நின்னுக்கிட்டா போதும்மா, அதுவே நகந்து மேல போய்விட்டுடும்...”, கையைப் பிடித்து மெதுவாக அருகில் அழைத்துச் சென்றான் அவன்.

“பயமா இருக்குய்யா..”, என்று மகனின் கையை அழுந்தப் பிடித்துக் கொண்டு, ஒரு வழியாக ஏறிவிட்டார் அம்மா.

ஏறியதும் பயம் கொஞ்சம் குறைய, லேசாகப் புன்னகைத்தவாறே, “இது நம்ம ஊரு ராட்னம் கணக்கா நல்லா இருக்கே...”, என்றார் மகனைப் பார்த்தவாறே.

அவனும் அம்மாவோடு சேர்ந்து, ”ஆமாம்மா”, என்று புன்னகைத்துக் கொண்டான்.

மறுபடி சேலை வாங்கிக் கொண்டு இறங்கையில், “நானா எறங்கறேன்...”, என்று தனியாக இறங்கி வந்தார் அந்த அம்மா, முகத்தில் ஆயிரம் வாட்ஸ் புன்னகையோடு அந்த எஸ்கலேட்டரில்.

பின்னால், அதை விட அதிக மகிழ்ச்சியோடு மகன்!

----------------------------------------

இந்த நிகழ்வு என் தோழி ஒருத்தி பார்த்ததாகச் சொன்னதை வைத்து எழுதியது.

இந்த நிகழ்வை அவள் சொன்னதும் எனக்கு நான் முதல் முறையாக சென்னையில் எஸ்கலேட்டரில் ஏறியது நினைவுக்கு வந்துவிட்டது.

ரயில் நிலையம் என்று நினைக்கிறேன். கல்லூரி முதல் ஆண்டு படிக்கையில் ஒரு முறை என் அப்பாவோடு சென்னைப் ”பட்டணம் போனேனா....”

அது வரை இந்த எஸ்கலேட்டரில் நான் ஏறியதே கிடையாது, எங்க ஊரில் அது கிடையவே கிடையாது, ஏன் லிஃப்ட்டில் கூட நான் ஏறியதில்லை அது வரை. அதுவும் லிஃப்ட் என்றால் ஒரு பயம், எங்கே நடுவில் நின்றுவிடுமோ? என்றெல்லாம்.

சரி, கதைக்கு வருவோம். எஸ்கலேட்டர்!

ம்ம், இந்தக் கதையிலாவது மகனுக்குத் தெரிந்து இருந்தது எப்படி ஏற வேண்டும் என்று, ஆனால், என் கதையோ காமெடிக் கதை, எனக்கும் தெரியாது, என் அப்பாவுக்கும் தெரியாது.

இருவரும் ரயில் நிலையத்தில் ஒரு எஸ்கலேட்டர் முன் நின்று பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு இருந்தோம்.

பின்னால் பெரிய கூட்டமே கூடிவிட்டது. “சார், ஏறிப் போங்க சார், பயப்படாதிங்க...”, ”ஏறு பாப்பா... பயப்படாத”, இப்படிப் பின்னால் இருந்து ஆளாலுக்குக் குரல் கொடுத்தார்கள் (நல்ல வேள, எங்கள யாரும் திட்டவோ அடிக்கவோ வரல), ம்ம்ஹ்ம், நாங்கள் இருவரும் ஏறிய பாடில்லையே!

இரண்டு நிமிடம் யோசித்த பிறகு எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. அப்பாவும் நானும் கையைப் பிடித்துக் கொண்டு எப்படியாவது ஏறிவிடலாம் என்று. (எவ்ளோ பெரிய ஐடியா, தோனுமா வேற யாருக்காவது? ம்ம்ஹ்ம் தோனாது, எனக்கு மட்டும் தான் தோனும் ;) )

”அப்பா, கையப் பிடிங்க..”, என்று, அப்பாவின் கையைப் ப்டித்துக் கொண்டு ஏறிவிட்டேன், மேலே செல்லச் செல்ல பயம்! (எறங்கனுமே மறுபடியும் கீழ?)

அதுவும் எப்படியோ கையைப் பிடித்தவாறு இறங்கிவிட்டோம்.

இப்போது நானும் சர்வ சாதாரணமாக லிஃப்ட், எஸ்கலேட்டர் எல்லம் பயன் படுத்துகிறேன், என் அப்பாவும் ஓரளவு கற்றுக் கொண்டுவிட்டார்.

இன்று வரை, எப்போது எஸ்கலேட்டரில் ஏறினாலும், முதலில் என் அப்பாவோடு கை பிடித்து ஏறியதை நினைத்துக் கொள்வேன். அத்தனை ஆனந்தமாக இருக்கும் நினைத்தாலே!

என்ன, உங்களுக்கும் இப்படி அனுபவம் இருக்கா? சொல்லிட்டுப் போங்களேன், முதல் எஸ்கலேட்டர் அனுபவத்த?

கருத்துகள்

  1. நான் மொத மொத பெங்களூர்ல எஸ்கலேட்டர்ல ஏறிருக்கேன்.. எங்க மாமா விறு விறுனு அதுல ஏறி முன்னாடி போயிட்டாரு.. நானும் என் தம்பியும் கீழ எங்களுக்கு பின்னாடி வந்தவங்களுக்கு வழி விட்டுட்டு அந்த நகரும் படிக்கட்டை பயத்துடனேயே பார்த்துக்கொண்டே இருந்தோம். மேலே ஏறிய எங்கள் மாமா கோவமாக எங்களைப்பார்த்து, “ஆம்பள பயலுக தானடா நீங்க? ஒழுங்கா ஏறி வாங்க” என்று கத்தினார்.. மொத்த கூட்டமும் எங்களையே பார்ப்பது போன்ற உணர்வு.. சாமியின் மீது பாரத்தை போட்டுவிட்டு எப்படியோ மேலே ஏறிவிட்டோம்.. என் தம்பி என் கையை இறுக்கி பிடித்துக்கொண்டான்.
    ஏறிய பின் ஒரே குஷி.. அன்று மட்டுமே பல முறை மாறி மாறி ஏறி இறங்கினோம்.. அன்றில் இருந்து இன்று வரை எனக்கும் என் தம்பிக்கும் எஸ்கலேட்டர் மிகவும் பிடித்த இடமாகிப்போனது. இப்போதும் அதில் ஏறும் போது எனக்கு அந்த பெங்களூர் ஞாபகம் நிச்சயம் வரும்.. எஸ்கலேட்டர் எல்லோருக்குமே இது போன்றே முதலில் திகில், அவமானம் & அடுத்தடுத்த அனுபவங்களில் சந்தோசத்தையும் தான் பலருக்கும் எஸ்கலேட்டர் கொடுத்திருந்தது என்று பலர் மூலம் அறிந்து கொண்டேன்..
    எங்க ஆச்சி அப்ப கூட பெங்களூர்ல மேல ஏறாம நாங்க போயிட்டு திரும்ப வர வரைக்கும் காத்துட்டு இருந்தாங்க.. அதே மாதிரி எங்க அம்மாவயும் எவ்வளவோ முயற்சி செய்தும் இது வரை எஸ்கலேட்டரில் ஏற்றவே முடிந்ததில்லை.. போன மாசம் கூட ஒரு துணிக்கடைக்கு போய் படியில் ஏறியிருக்கிறார் எங்க அம்மா.. “ஏம்மா அப்படி?”னு கேட்டதுக்கு, “அது மேல போகும் போதே ஒடஞ்சு கீழ விழுந்திருமோனு பயமா இருகுப்பா”னு சமாளிப்பு வேற...
    நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் ஆமா எல்லாருக்குமே இப்படி ஒரு அனுபவம் இருக்கும். என் தம்பியும் இப்படித் தான் முதல் தடவையா ஏறினப்போ மேலயும் கீழயும் போய் விளையாடிட்டே இருந்தான், நாங்க எல்லாம் அவன பாத்துட்டே இருந்தோம், அவ்ளோ சந்தோசமா வெளையாடுனான் அதுல, எறங்குற வழில ஏறி சுத்தி இருக்க எல்லாரையும் சிரிக்க வச்சுட்டு இருந்தான்... நன்றி..

      நீக்கு
  2. ம்ம்ம்ம்ம்... எங்கம்மாவும் இப்படித்தான்... உங்க தோழி விருது நகர் அல்லது திருநெல்வேலி மாவட்டமாய் இருக்கவேண்டும்.. ஸ்லங் காட்டிக் கொடுக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) என் தோழி டயலாக் எல்லாம் சொல்லல, அவ லைட்டா ரயில்வே ஸ்டேசன்ல பாத்ததா சொன்னத வச்சு நான் தான் கதவிட்ருக்கேன் இங்க. சரியாச் சொன்னிங்க, நான் சிவகாசி, விருதுநகர் மாவட்டம் தான், அதான் நான் எழுதுனது அப்டி இருக்கு. நன்றி :)

      நீக்கு
  3. அருமையான பதிவு! மூளையைத் தட்டி தட்டிப்பார்க்கிறேன்..நினைவு வர மாட்டேன்கிறது என் முதல் எஸ்கலேடர் அனுபவம். படியாக இல்லாமல் நடக்காமல் நின்று கொண்டு செல்லும் எஸ்கலேடர் 2008ல்
    அமெரிக்காவிலிருந்து வரும்போது விமான நிலையத்தில் முதன் முதலில் போனேன் என்று நினைக்கிறேன்..நான் என்ன நினைத்தேன் என்பதை விடவும் அதில் முன்னே ஓடி பின்னர் எங்களிடம் மீண்டும் வந்து விளையாடிக்கொண்டிருந்த 3 வயது மகனின் மகிழ்ச்சிதான் நினைவில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) மிக்க நன்றி. ம்ம், என் மனதில் அப்பா கை பிடித்து ஏறியது பதிந்தது போல, உங்களுக்கு மகனின் சிரிப்பு! :)

      நீக்கு
  4. அம்மாவை கூட்டிச் செல்லும் வாய்ப்பு அமையவில்லை... இருந்தாலும் அந்த மகனாக என்னை நினைத்துக் கொண்டேன்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்