முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில:

1) நல்ல பிள்ளையா இருக்கணும்.
2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும்.
3) தெனமும் skype ல பேசிரணும்.
4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது!

இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை.

Ginger, Guy, Kanmani :D Lab Friends
“கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா, உங்களுக்கு மாறுனாலும் குத்தம், மாறாம அப்படியே இருந்தாலும் குத்தம்!”, என்று நான் பதில் சொல்லிக் கொண்டிருப்பேன்.

என் அம்மா உடனே, “இல்ல, முடியக் கிடிய கொஞ்சம், straightening பண்ணி, அழகா மேக்கப் போட்டு வந்தா பாக்க நல்லா இருக்கும்ல, ஆனா அதுக்குன்னு குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது!”

இப்படித் தான் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த போதும் சொன்னார். என் வாதம் -  ”நான் எப்படி வளர்ந்தேனோ, அப்படித் தான் இருக்கும் என் பழக்கம், எனக்கு முடியை straightening செய்யும் காசை சேர்த்து வைக்கலாம், அதுவும் இல்லாமல் கண்ட கழுதையெல்லாம் செய்தால் ஒரு வேள முடி கொட்டித் தீர்த்துவிட்டால்? (ஏற்கனவே கொட்டுது!) காசு குடுத்து மேக்கப் போடுவதற்கு நான் நான்கு வேளை நன்றாக சாப்பிட்டுவிடலாம். அத்தியாவசிய தேவை தவிர்த்து ஏன் அதிகம் செலவு செய்வானேன்?”

இப்போது, இங்கு வந்தும் இந்தியாவில் எப்படி இருந்தேனோ அப்படித் தான் இருக்கிறேன். சிறு மாற்றங்கள் இருக்கத் தான் செய்கின்றன, உணவு முறை மாறி இருக்கிறது - அதிகமாக இங்கு மாமிசம் தான் சாப்பிடுகிறார்கள். நான் இட்லி தோசை என்று கிடைக்காத சோகத்தில், wheat bread, corn flakes, பால், முட்டை, வாழைப் பழம், ஆப்பிள் என்று நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன் :P

வந்த முதல் நாள் அம்மாவிடம் skype இல் பேசினேன். அம்மா, “என்ன, நீ அங்க போயும் அதே மாதிரி தான் இருக்கற?” (இதைக் கேட்கும் போது, அவர் முகத்தில் ஒரு சந்தோசம் - நம்ம பொண்ணு எங்க போனாலும் கழுத அப்படியே தான் இருக்கும், என்று)

“அம்மா, பின்ன வேற நாட்டுக்கு வந்தா மூஞ்சி மாறியா போகும்?”

இங்கு யாரும் என்னை விசித்திரமாகப் பார்ப்பது போலத் தோன்றவில்லை எனக்கு (வரும் முன் அவ்வளவு பயம் எனக்கு, எங்கே எதுவும் கேலி செய்வார்களோ என்றெல்லாம்). இங்கு இருக்கும் மக்கள் அன்பானவர்களாகத் தான் தெரிகிறார்கள் இந்த ஒரு சில வார காலத்தில்.

”dzou / sen" - Good morning
"m / goi" - Thank you - இப்போதைக்கு இந்த இரண்டு மட்டும் தான் Cantonese இல் கற்றுக் கொண்டு இருக்கிறேன். கூடிய விரைவில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

இங்கு எல்லா இடங்களுக்கும் செல்ல நல்ல பேருந்து வசதியும், மெட்ரோ ரயில் வசதியும் உள்ளது. நம் ஊர் போல பேருந்தில் conductor "ticket ticket" என்று கொடுப்பதில்லை. பேருந்தின் உள்ளே நுழையும் போதே இருக்கும் machine இல் காசு போட்டு உள்ளே செல்லலாம். "Octopus" என்று இங்கு ஒரு card கிடைக்கிறது. இதை ATM card போல பயன்படுத்திக் கொள்ளலாம்.

Octopus card
பெரும்பாலும், இந்த card-ஐ பேருந்தில் பயணம் செய்யவும், மெட்ரோவில் செல்லவும் பயன்படுத்தலாம். ஐம்பது ஹாங்காங் டாலர்கள் இந்தக் கார்டை வாங்கும் போது டெபாசிட் செய்ய வேண்டும், மீண்டும் கார்டைக் கொடுத்தால், இந்தப் பணத்தை கொடுத்துவிடுவார்களாம். முதலில், நூறு ஹாங்காங் டாலர்கள் கொடுத்து பணம் ஏற்றிக் கொள்ளலாம் கார்டில். பேருந்து, மெட்ரோ தவிர்த்து, ஷாப்பிங் மால், பெரிய கடைகள் எல்லாவற்றிலும் இந்தக் கார்டை வைத்து பொருட்களும் வாங்கிக் கொள்ளலாம். இதை காசு கொடுத்து அதற்கென இருக்கும் இடங்களில் “topup" செய்தும் கொள்ளலாம். Online topup பற்றி எனக்குத் தெரியவில்லை, ஏனெனில் என்னிடம் இன்னும் இந்த ஊரில் bank account இல்லை.

மறந்தே போனேன் பாருங்களேன். நான் இங்கு தங்கி இருக்கும் இடம் ஊரைவிட்டு மிகவும் தூரத்தில் இருக்கிறது, ஊருக்குள் செல்ல வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் ஆகும். University of Hong Kong கினுடைய marine ஆராய்ச்சி கூடம் ஒன்று இங்கு இருக்கிறது. அங்கு தான் நான் அருகில் இருக்கும் தங்குமிடத்தில் இருக்கிறேன். கடை எதுவும் அருகில் கிடையாது. ஹாங்காங் - கடல் ஓரத்தில் இருக்கும் மலைகளில் தான் இருக்கிறது இந்த ஆராய்ச்சிக் கூடம். காற்றில் ஈரப்பதம் அதிகம் என்பதால், சகட்டு மேனிக்கு வேர்த்து ஊத்துகிறது. ஊருக்குள் செல்ல அதிக நேரம் ஆகிறது என்பதால், வாரம் ஒரு முறையோ அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறையோ சென்று மொத்தமாக வேண்டிய சமையல் பொருட்களை வாங்கி வந்துவிட வேண்டும்.

My Laboratory - Swire Institute of Marine Science, HKU
ஆனால், அழகான இடம் இது. கடலோரத்தில் மலை மேல், மிகவும் அற்புதமான இடம். இருப்பினும், இதே இடத்தில் பல வருடங்கள் வாழ்வது எல்லாம் சரி வருமா என்று தெரியவில்லை. நான் இங்கு ஒரு மூன்று நான்கு மாதங்கள் மட்டுமே இருப்பேன், பிறகு ஊருக்குள் இருக்கும் University main campus இல் இருக்கும் ஆய்வுக் கூடத்தில் தான் ஆராய்ச்சி எல்லாம்.

வந்த அன்றே, இங்கிருக்கும் ஆராய்ச்சி மாணவர்களோடு சேர்ந்து கொண்டு ஊருக்குள் சென்றேன். அதில் ஒருவர், என்னை ஏர்போட்டிற்கு அழைத்துச் செல்ல வந்த “Guy" (ஆளு பேரு தான்), பிறகு  Circle, Jorein என்று இரு பெண்கள். ஆமாங்க, ஆமா பேரே “guy", "circle" தான்.

“Fish balls", என்று ஒரு snack item வாங்கிக் கொடுத்தார்கள். Spicy வேண்டுமா என்று கேட்டார்கள், “ம்ம், ஆமாம்”, என்று வாங்கினேன். ஆனால் பாருங்கள் இந்த ஊரு “spicy" ஏ எனக்கு சப்பென்று தான் இருந்தது! ஐயஹோ! என் செய்வேன் இன்னும் நாலு வருஷத்துக்கு?

பிறகு சாப்பிட நிறைய பழங்கள், காய்கறிகள் என்று வாங்கி வந்தேன். நன்றாகப் பேசினார்கள் அனைவரும் என்னிடம். மாணவர்கள் எல்லோருக்கும் ஆங்கிலம் வருகிறது, ஆனால், கடைகளுக்கு எல்லாம் சென்றால் பாஷை தெரியாமல் கஷ்டம் தான். சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பெண் பில் போடும் முன் ஏதோ “கையா முய்யா” என்று கேட்டார். திறுதிறுவென விழித்துக் கொண்டே நின்றேன். பின்னர், “baeg, baegu" என்றார். பின்னர் தான் புரிந்தது, “bag" வேண்டுமா என்று கேட்கிறார் என்று.

எப்படியோ, ஓடிவிட்டது இரண்டு வாரங்கள். இந்த sunday - big wave beach என்ற பீச்சிற்குப் போகிறோம், வருகிறாயா?”, என்று கேட்டார்கள் உடன் தங்கியிருப்பவர்கள். சரி, அறையிலேயே இருந்து என்ன தான் செய்யப் போகிறோம், வெளியே சென்று பழகினால் தானே நாமாக தனியே பேருந்தில் செல்ல எல்லாம் பழக முடியும் என்று, “வருகிறேன்” என்று சொல்லி, உடன் சென்றேன்.

பீச், என்றால், நம்மூரில் கால் நனைத்து விளையாடிவிட்டு வருவோம், சிலர் குளிப்பார்கள், நான் அதிலும் சுத்தம், ஊரிலேயே உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பதோடு சரி.

இங்கு பார்த்தால், அதிர்ச்சி, அதிர்ச்சி, பேரதிர்ச்சி! எல்லாருமே, "bikini" போட்டு இருக்காங்க! நான் மட்டும் இழுத்துப் போர்த்தியது போல உடை அணிந்து கடற்கரையில் உட்கார்ந்து, “பே” என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். எல்லோரும், “லல்லல்லல்லலல்லா...” என்று உடைகளை தூக்கிப் போட்டுவிட்டு, "bikini" இல் குதித்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இதில், சில பெண்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி, என்னென்னவோ வித்தை எல்லாம் காட்டிக் கொண்டு இருந்தார்கள். ஒரு குடும்பம், ஒரு tent ஐ ஒரு மணி நேரமாக கஷ்டப்பட்டு போராடி கட்டிக் கொண்டு இருந்தார்கள். சிலர், பந்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள். சிலர் எதோ ஒரு தட்டைத் தூக்கி எறிந்து விளையாடினார்கள்.

நான் மட்டும், “ஐயய்யோ, தெரியாம வந்துட்டோமேடா”, என்று உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். இதில் என்னுடன் வந்த பெண்களும், ஆண்களும் “beer" அருந்த, நான் “lemon juice" ஐ சப்பிக் கொண்டு இருந்தேன். ஆனால், இவர்கள் "beer" குடித்தாலும் இரண்டு tin தான் குடித்தார்கள், மயங்கி விழவும் இல்லை, ஆட்டம் போடவும் இல்லை, எப்போதும் போல் தான் இருந்தார்கள்.

இறுதியாக, ஒரு உணவகத்தில் சாப்பிடச் சென்றோம். நான் menu card இல் இருந்த படங்களை எல்லாம் பார்த்தேன், எது நம்மூர் சாப்பாடு மாதிரி இருக்கிறது என்று பார்த்து, ஒரு படத்தைக் காட்டி, “இது வேண்டும்”, என்றேன். அது “Thai Fried Rice" என்றார்கள். முட்டை மட்டும் போட்டு ஒரு fried rice கொண்டு வந்தார்கள்.

சரி சாப்பிடலாம் என்று பார்த்தால், ஒரு ”குச்சி”, இல்லை, இல்லை, இரண்டு குச்சிகள். அந்த இரண்டு குச்சிகளை வைத்துத் தான் சாப்பிட வேண்டுமாம். ”நமக்கு spoonஅ வச்சே ஒழுங்கா சாப்ட வராது, இதுல குச்சி வேறயா”, என்றிருந்தது எனக்கு. நினைத்துப் பாருங்கள், இரண்டு குச்சிகளால், சாதம் சாப்பிட்டால் ஒரு தடவயில் வாயில் எவ்வளவு வைக்க முடியும் என்று. “இரண்டு மூன்று பருக்கை தான் வரும்”. ஒருவேளை இப்படிச் சாப்பிடுவதால் தான் பெரும்பாலும் இங்கு எல்லோருமே ஒல்லியாக இருக்கிறார்களோ? எப்படியோ அந்தக் குச்சிகளை வைத்துப் போராடி சாப்பிட்டு முடித்தேன்.

அனுபவங்கள் தொடரும்...

ஆமா, தலைப்பு என்ன கோணம்மானு கேக்கறிங்களா? எங்கப்பா ஊருல ரெண்டு பிள்ளைங்க இருந்தாங்களாம், கோணம்மா சம்முக வடிவுனு, ரெண்டு பேரும் தல சீவாம, செய்யாம, எனக்கென்னனு இருப்பாங்களாம்; நான் குளிக்காம, தல சீவாம, சோம்பேரியா வீட்ல சுத்திட்டு இருக்கப்போ, எங்கப்பா என்னப் பாத்து, “கோணம்மா சம்முக வடிவு மாதிரி இருக்க”னு சொல்வாங்க. இப்போ இங்க வந்தும், ஒன்னும் மாறல, கோணம்மா சம்முக வடிவு மாதிரி தான் இருக்கேன் :P  (ஹலோ, அதுக்குனு குளிக்காம எல்லாம் இல்ல, மாறலனு சொல்ல வரேன், யாரு கண்டா, மாறுனாலும், மாறலாம்?!!)

கருத்துகள்

  1. பதில்கள்
    1. அவங்க பேரு அதான். இன்னொரு பேரும் இருக்கு, ஆனா அது அவங்க மொழில கஷ்டமா இருக்கும் கூப்ட, அதனால இப்டி தான் கூப்பட்றாங்க :)

      நீக்கு
  2. :) அப்பப்போ பிலாக் எழுதுங்க

    //
    அதுவும் இல்லாமல் கண்ட கழுதையெல்லாம் செய்தால் ஒரு வேள முடி கொட்டித் தீர்த்துவிட்டால்? (ஏற்கனவே கொட்டுது!) // :D

    Laboratory இருக்குற இடம் செமயா இருக்கு !
    வாழ்த்துக்கள் கண்மணி All the best for your Research.

    பதிலளிநீக்கு
  3. சீக்கிரமாஎதுனா ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு நிகழ வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. Nice... have a happy days. All the best for your new journey.....god bless you. Take care .....

    பதிலளிநீக்கு
  5. You are the roll model for my daughter.....

    பதிலளிநீக்கு
  6. ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு நிகழ வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. All the best for your career :)

    பதிலளிநீக்கு
  8. Ha Ha ha Semaaaa experience :) :) Siripaavum iruku paavamavum iruku :) Inimel lunchk thai fried rice parcel :D

    காசு குடுத்து மேக்கப் போடுவதற்கு நான் நான்கு வேளை நன்றாக சாப்பிட்டுவிடலாம் :) Correctu Namku soru thaan mukkiam :)

    ஐயஹோ! என் செய்வேன் இன்னும் நாலு வருஷத்துக்கு? - Just four months thaana :)

    Anyway congrats and wish you all the best for your research :) Keep up your dedication :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hi, four years! not four months //என் செய்வேன் இன்னும் நாலு "வருஷத்துக்கு?"//

      Thanks :) for your kind words.

      நீக்கு
  9. Hi Kanmani,
    I am in this space after a long time... i guess may be an year...
    so much changes in your life :) and so much maturity in your literature.. Happy to see. All the best.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Welcome back :)
      //so much changes in your life :) and so much maturity in your literature..//
      I have grown up :P :D Thanks Sathish.

      நீக்கு
  10. All the best for your research journey. Thanks for sharing your life expey as post. It's really informative beauty post.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா8/13/2017 6:38 PM

    Very nice.... Please write an article now....about hkn China... Hope now you know that we can recharge octopus linking it with credit card and it will automatically get HKD250 once value becomes negative.

    பதிலளிநீக்கு
  12. தீபாவளி வாழ்த்துக்கள்

    By Arivarasan

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்