முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்பாக்குட்டிக்கு!

அப்பாக்குட்டி,

சிறுவயதில் இருந்தே, "அம்மா" புடிக்குமா? "அப்பா" புடிக்குமா?, இந்தக் கேள்விக்கு, "நான் அப்பாக் குட்டி" என்றே பதில் சொல்லிப் பழகியவள் நான்.

"குட்டி, அப்பாக்குட்டி, செல்லம்", இப்படித் தான் அழைப்பீர்கள் என்னை நீங்கள்? நினைவிருக்கிறதா? ஆனால், இன்று, என்னை அழைப்பதையே நிறுத்திவிட்டதேனோ?

நீங்கள் என்னை அப்பாக்குட்டி என்று அழைப்பதை நிறுத்திய நாள் தொட்டு, உங்களை நான் அப்பாக் குட்டி என்று அழைத்துத் திரிகிறேன்.

இத்தனை வயது ஆன போதும், சிறுபிள்ளை போல மகிழ்கிறேன், உங்களை அப்படி அழைக்கும் போதெல்லாம்.

நான் என்ன பிழை செய்தேன்? இப்படி பேசாமல் இருக்க? ஒரு வழிப் பாதை போல, நான் மட்டும் உங்கள் முன்னே அமர்ந்து புலம்பிக் கொண்டிருக்கிறேன், தினமும்!

பதிலுக்கு ஒரு "ம்ம்" கொட்டக் கூட உங்களுக்கு விருப்பம் இல்லை!

அன்று ஒரு நாள் நினைவிருக்கிறதா? நான் நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, தட்டில் சட்னி வைத்தேன், "நீ ஒன்றும் வைக்க வேண்டாம்", என்று சொல்லி விட்டீர்கள்.

நான் பரிமாறும் வார்த்தைகள் தான் கேட்க விருப்பம் இல்லை, உணவு கூடவா?

மகள் கையால் சாப்பிட விரும்புவார்கள் எல்லா அப்பாவும், ஆனால், நான் செய்த பாவமா? நான் பரிமாறினால் உண்ண மறுக்கிறீர்கள்!

ஏன் என்று காரணம் கேட்டால், நீங்கள் பெருமைப்படும் படி நான் நடந்து கொள்ளவில்லை! நீங்கள் ஆசைப்பட்டதை நான் செய்யவில்லை!

என்ன செய்யவில்லை, எல்லாப் பெற்றோரும் ஆசைப்படத்தான் செய்வார்கள், பிள்ளை நன்றாகப் படிக்க வேண்டும் என்று.

நீங்களும் அதைத் தான் கேட்கிறீர்கள். நான் மாட்டேன் என்று சொல்லவில்லையே?

நான் என்ன பரிட்சையில் தோல்வியா அடைந்தேன்? இப்போதும் வகுப்பில் முதல் மாணவியாக தானே இருக்கிறேன்?

ஆனால், நீங்கள் சொல்லும் காரணம், பனிரெண்டாம் வகுப்பில், மாநிலத்தில் முதலாவதாக வரவில்லை. ஆம், வரவில்லை. ஆனால், 90 சதவீதத்திற்கு மேல் வாங்கினேனே?

பள்ளியில் என்னை விட அதிக மதிப்பெண் வாங்கியவர்கள் கூட, கல்லூரியில் இப்போது குறைந்த மதிப்பெண் வாங்குகிறார்கள், நான் நன்றாகத் தானே படிக்கிறேன்? :( :(

செய்தித் தாள், நாளிதழ்களில் பெயர் வரும்படி பெரிதாக சாதித்தால் தான் பேசுவேன் என்கிறீர்கள்! நியாயமா?

"என் அப்பா பேசவில்லை", என்று அழும் நான், தோழிகளுக்கு மத்தியில்  கோமாளியாகி நிற்கிறேன்.

யார் இன்றெல்லாம் கவலைப்படுகிறார்கள், அப்பா, அம்மா பேசவில்லை என்று? ஒரு சிலர், என் போன்ற கோமாளிகள் தான் படுகிறார்கள்!

எனக்கு உங்கள் மீது கொள்ளை பிரியம், உங்களுக்கும் தான், ஆனால், என்னோடு ஏன் பேசுவதில்லை?

மதிப்பெண் வாங்கினால் தான் உங்கள் மகளா? அப்போது தான் பேசுவீர்களா?

எதையுமே எதிர்ப்பார்க்காமல் பெற்றோர் அன்பாய் இருப்பார்கள் என்று சொல்வார்கள், நீங்களும் அன்போடு தான் இருக்கிறீர்கள்.

ஒன்று கேட்டால், நான்கு கிடைக்கும் எனக்கு. ஆனால், பொருள், பணம், இவை தந்திடுமா அன்பாய் நீங்கள் பேசும் அந்த நான்கு வார்த்தை தரும் இன்பத்தை?

நேற்று இரவு கூட அழுதேன், மூன்று மணி வரை அழுதேன், அப்பா பேசவில்லையே என்று.

எத்தனை முறை உங்களிடம் அழுதிருக்கிறேன், பேசுங்கப்பா பேசுங்கப்பா என்று... இத்தனை வருடமாக என்னோடு பேசாமல் இருப்பது நியாயமா?

அழுது கொண்டே இருக்கும் போது, என்னென்னவோ தோன்றும், ஆனால், அதெல்லாம் தவறு, அப்பாவிற்கு நம் மீது பாசம் அதிகம் என்று நினைத்துக் கொள்வேன்.

இந்தக் கடிதம் வாசித்த பின்பாவது பேசுங்களேன்? பேசாவிட்டாலும் என்னால், இருக்க முடியும், தனியாக உங்கள் முன் நின்று புலம்பிக்கொண்டே, எப்போதும் போல.

இரவெல்லாம் அழுது, பகலெல்லாம், சிரித்து சிரித்து, குழந்தை போல உங்கள் முன் நடித்து, இன்பமாக இருக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன்.

எப்படியாவது உங்களை பேச வைக்க வேண்டும் என்று, என்னென்னவோ செய்து பார்க்கிறேன் நானும், ஆனால், ஒரு நாளிதழிலும் என் பெயர் போட யாரும் முன்வருவதில்லை பாருங்கள்! அதென்ன அத்தனை எளிய காரியமா?

என்றாவது பேசுவீர்கள், என் பெயர் ஏதோ ஒரு நாளிதழில், வரும்போது! அன்று, எனக்கு ஆனந்தமாக இருக்கும் என்று நினைக்காதீர்கள், வேதனையாக இருக்கும், இதற்கா இத்தனை நாள் என்னை வேதனைப்படவைத்தீர்கள் என்று.

உங்களுக்கு நினைவிருக்கிறதா? அன்றொரு நாள், ஒரு கல்யாண வீட்டில், உங்கள் நண்பர் ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்த, தூரத்தில் நின்ற என்னை, "சுந்தரி...", என்று பெயர் சொல்லி அழைத்தீர்கள்.

அன்று நான் அம்மாவிடம், அக்காவிடம், அத்தையிடம், மாமாவிடம் என்று எல்லோரிடமும், அப்பா என்னை பெயர் சொல்லி அழைத்தார் என்று சொல்லிச் சொல்லி ஆனந்தப்பட்டேன். எல்லோரும், என்னைப் பார்த்து சிரித்தார்கள்!

அப்படி அழைக்க வேண்டும் என்பதற்காகவே, இப்போதெல்லாம், வெளியே சென்றால், தூரமாக உங்களை விட்டு தள்ளி நின்று கொண்டு, அழைப்பீர்களா அழைப்பீர்களா என்று பார்க்கிறேன்! ஆனால், அழைக்கவே இல்லை அதன் பிறகு :( :'(

நீங்கள் பேசாவிட்டாலும் பரவாயில்லை என்று என்னால் இருக்க முடியவில்லை, பேசாமல் இருந்து கொண்டு, உங்கள் பணத்தில் சோறு சாப்பிட, உடை உடுத்தக் கூட, இதயம் வலிக்கிறது. வேறு எங்காவது சென்று நாமே சம்பாதிப்போமா... வேலைக்குச் செல்வோமா... என்றெல்லாம் யோசித்துக் கொள்கிறேன்.

ஆனால், என்னை தான் வீட்டை விட்டு எங்குமே நீங்கள் அனுப்புவதில்லையே!

நேரில் தான் பேசவில்லை என்று, ஒரே வீட்டுக்குள் இருந்து கொண்டு, அலைபேசியில் குறுஞ்செய்தி கூட அனுப்பிப் பார்த்துவிட்டேன். ஆனால், எதுவும் பயனளிக்கவில்லை, நீங்கள் பதிலளிக்கவில்லை!

இதோ, இதைப் படித்தபிறகும் நீங்கள் பேசப்போவதில்லை, நான் அறிந்த ஒன்று தான் அது. இருந்தாலும் ஒரு ஆனந்தம், எப்போதும் போல, தனியாய் உங்கள் முன் புலம்புவதில்!

=======================================================
என்றும் உங்கள் அன்பு மகள்???
சுந்தரி.



கருத்துகள்

  1. உங்கள் எழுத்து உண்மையோ, கற்பனையோ அழகு, எனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு ஆனால் நான் பள்ளிப் படிப்பில் உங்களுக்கு நேர் எதிர்,

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் எழுதியிருக்கும் இப்பதிவு, கட்டுரையாக இல்லை,பெருங் கவிதையாக இருக்கிறது.... நீங்கள் அப்டித்தான் நினைத்து தான் எழுதினீர்களா? அழகு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையா? :) இல்லை, கவிதை என்று நினைத்ததெல்லாம் எழுதவில்லை. என்ன கொடும சரவணன் இது, கவிதை எழுதுன கட்டுரைன்னு சொல்றைங்க, கட்டுரை எழுதுனா கவிதைன்னு சொல்றைங்க. என்னமோ போங்க!

      :) மிக்க நன்றி :)

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்