முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரெட்டை ஜடை வயசு!



அப்போது ஒரு எட்டு அல்லது பத்து வயது இருந்ததாக நினைவு! இப்போதெல்லாம் இந்த வயதில் எல்லா பெண் பிள்ளைகளும் அழகாக ”பாப் கட்” வைத்துவிடுகிறார்கள். ஆனால், அப்போது எனக்கு நீளமான முடி!

அழகாக ரெட்டை ஜடை - ”ரிப்பன்” (ஊதா கலர் இல்ல! ;) :) ) வைத்துப் பிண்ணி போட்டு விடுவார் என் அம்மா! ஆனால், அது எப்படியும் பள்ளியில் இருந்து சாயங்காலம் வீடு வருவதற்குள், பாதி பிரிந்துவிடும் பின்னல்.

“அம்மா, ஒழுங்கா ஜட போட்டு விடுங்கம்மா, ”தீபா” எல்லாம் ஜட போட்டு வர்றா, அவளுக்கு மட்டும் பிரியவே மாட்டேங்குது! என் ஜட மட்டும் பிரிஞ்சு போகுது”. இப்படி தினமும் காலையில் கிளம்பும் போது என் வீட்டின் பின் வாசலில் உட்கார்ந்து, அம்மாவிடம் ஒரு அதட்டல் போடுவேன்!

அம்மா சொல்வார், “இரு ஒரு நாள் முடிய வெட்டி விடறேன்”, என்று!

உடனே நான், “பொறாம உங்களுக்கு, இப்டி நீளமா முடி இல்லனு!”.

அந்த ரெட்டை ஜடை என்றால் அத்தனை பிடிக்கும் எனக்கு! எல்லாருக்குமே பிடிக்கும் தானே நீளமான முடி என்றால்!

ஆனால், என் அம்மாவுக்கோ, என் முடியை எப்படியாவது வெட்டிவிட வேண்டும்!

என்னடா? எந்த அம்மாவுக்காவது நீளமாக இருக்கும் முடியை வெட்ட மனம் வருமா? அதுவும் அழகாக இருக்கும் முடியை??? வராது தானே???

ஆனால், என் அம்மாவுக்கோ, எப்படியாவது வெட்டிவிட வேண்டும் என் முடியை என்கிற நினைப்பு! அதுவும் எனக்கு அந்த முடி பிடிக்கும் என்று தெரிந்தும்! என் அதட்டலுக்காக, விளையாட்டுக்கு சொல்கிறார் என்று இல்லை. உண்மையில், அந்த முடியை வெட்ட வேண்டும் என்பதே அவரது நினைப்பு!

காரணம்? நீளமான முடி! பத்து வயது! பள்ளிக்குப் போகும் பெண்!

சொல்லவே தேவை இல்லை! என்ன? புரியலையோ?

”பேன்!!”

அப்போது என் வகுப்பில் தலையில் பேன் இல்லாத பெண்ணே இல்லை எனலாம்!

எனக்கு வேறு நீளமான முடி! சொல்லவே வேண்டாமே! என் தலை தான் பேன்களின் உல்லாச விடுதி!

அப்போது, என் அம்மா என்னென்னவோ செய்து பார்த்தார்! மிளகு அறைத்துப் போடுங்க - இப்படி ஒரு பக்கத்து வீட்டு அக்கா சொல்ல, என் தலையில் மிளகு கூட அறைத்துப் போட்டுவிட்டார்! ஒரே எரிச்சல் எனக்கு தானே தவிற, ஒரு பேன் கூட,சாகவே இல்லை, சாக என்ன, மயங்கக் கூட இல்லை!

மிளகாய் அறைத்துக் கூட போடலாம் என்று திட்டம் போட்டார் அம்மா ஒரு நாள்! ம்ம்ஹ்ம், ஒடியே ஒடிவிட்டேனே!

“தலையும் தலையும் சேரம்மா...”, இப்படி ஒரு விளம்பரம் வரும் அல்லவா, அதெல்லாம் வாங்கிப் போட்டார்கள்! ம்ம்ஹ்ம், ஒன்னும் ஆகலையே! என் அப்பா பாவம், நிறைய மருந்து வாங்கி வந்து தருவார்.

“பிள்ளையே ஒல்லியாக் கெடக்கு, இதுல சாப்பட்றதெல்லாம் இந்த பேனுக்கே போயிரும் போல!”, இப்படி ஒரே வருத்தம் என் வீட்டில்!

கடையில் கிடைத்த அத்தனை மருந்தும் வாங்கிப் போட்டார்கள்! ஆனால், இந்தப் பேன்கள், “சூப்பர் பக்ஸ்” போல, எதற்கும் அசையவே இல்லை!

அப்போது பேன் ஏன் வருகிறது என்று பி.ஹெச்.டி. செய்தது போல, பலரும் பல காரணம் சொன்னார்கள்.  ”அடிக்கடி தலைக்கு குளிக்கனும், இல்லனா பேன் வரும்!”, “ஸ்கூலுக்குப் போறா, அதான், பக்கத்துப் பிள்ள கிட்ட இருந்து வரும்”, “அழுக்கு! அதான்”, “வாசமான ஷாம்ப்பூ போடாதிங்க, பேனுக்கு மல்லிகைப்பூ ஷம்ப்பூனா புடிக்கும், நெறைய வரும்!”, இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்று சொல்ல! என் தலையில் என் அம்மா ரிசர்ச் செய்து கொண்டு இருந்தார் எல்லா தியரிகளையும்! என் பாடு கொடூரமாகிப் போனது பரிசோதனை எலியைப் போல!!!

அழுக்கு என்றார்களே! தினமும் தலைக்குக் குளிப்பாட்டினார் என் அம்மா! ஐய்யோ, தெனமும் தலைக்குக் குளிக்கனுமா??! இப்படி அழுவேன் நான்!

அட்வைஸ் சொல்வார் தினமும், “ஏய், அந்த பரணி பிள்ள பக்கத்துல இடிச்சிக்கிட்டு உக்காராத, அவ கிட்ட இருந்து தான் வருது!”

வாசமான ஷாம்ப்புவும் கட் :( அப்போதெல்லாம் வாசமான ஷாம்ப்பூ எவ்வளவு புடிக்கும் தெரியுமா?

தினமும் ஒரு மணி நேரம் என் தலையில் பேன் வேட்டை நடக்கும்! அதான், தேடுவார்கள், சீப்பை வைத்து முடியெல்லாம் கொட்டுவது போல சீவுவார்கள்! :( :(

பேன் பார்க்க வா, என்று யாராவது சொன்னாலே ஓடுவேன் நான், ஒளிந்து கொள்வேன்!

என் அவ்வா(பாட்டி) தான் எனக்குப் பேன் பார்ப்பார் பல நேரம், அவருக்கு அது ஒன்று மட்டும் தான் வீட்டில் இருக்கும் வேலையே!

அவர் “ஏ கண்ணுமணி... பேன் இழுக்க வா...”, இப்படி சவுண்டு கொடுத்தாலே, ஓடிப் போய் ஒளிந்து கொள்வேன் நான்.

ஆனாலும், என் அத்தை பையன் ஒருவன் இருக்கிறானே, பிடித்துக் கொடுத்து விடுவான் என்னை! அவனுக்கு அது ஒன்று தான் வேலை! முக்கியமான வேலை!

பிடித்தாகிவிட்டதா! ஆகிவிட்டது! அடுத்து உட்கார வைத்து எனக்கு தூக்கம் வருவது போல மெதுவாகத் தலையில் சீவுவார் பேன் சீப்பை வைத்து, என் அவ்வா! என் அம்மா என்றால் சீவும் சீவில் ரத்தமே வந்துவிடும், அதற்கு அவ்வாவே மேல் என்று நானும் விட்டுவிடுவேன்!

இப்படி என்னென்னவோ செய்தும் போகாத அந்தப் பேன், இறுதியாகப் போய்விட்டது நான் கொஞ்சம் பெரியவள் ஆனதுமே! ஆனால், எப்படி என்று மாயம் இன்னும் தெரியவே இல்லை!

இன்றென்னவோ, பேனும் இல்லை, அதைச் சீவ என் அவ்வாவும் உடன் இல்லை! :( ஏன் என்று தெரியவில்லை, உடன் இருந்தவரை அவ்வா, தாத்தாவின் அருமை எல்லாம் தெரியவே இல்லை! இன்று என்னவோ திடீர் என்று அவ்வா நினைவு!

இன்று ஒரே ஏக்கம், அவ்வா இருந்தால், பேன் சீவி இருப்பாரே, கதை சொல்வாறே, தாத்தா இருந்தால், தோளில் தூக்கிக் கொண்டு முக்குக் கடையில் முள்ளு முறுக்கும் அல்வாவும் வாங்கிக் கொடுத்து இருப்பாரே என்றெல்லாம்!

பி.கு. - இப்போ என் தலைல பேன் எல்லாம் இல்ல, அது சின்ன வயசுல, ஒடன கலாய்ச்சிடாதிங்க இப்போ! :)

கருத்துகள்

  1. ஐயோ சாமீ ...! இந்த விளையாட்டிற்கு வர்ரலே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) கவல படாதிங்க, உங்களுக்கு பேன் வராது! :P :D

      நீக்கு
  2. ஹா ஹா ஹா... இந்த மாதிரி ஒரு விஷயத்தை யாரும் சொன்னதே இல்லை.... ரொம்பவே சுவாரஸ்யம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரும் சொல்லி இருக்கமாட்டாங்க, ஆனா எல்லா பொண்ணு இருக்குற வீட்லயும் நடந்து இருக்கும்! :) நன்றி :)

      நீக்கு
  3. One of the irritating jobs done by mothers to their school going daughters!!!!

    பதிலளிநீக்கு
  4. ஈறைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கி என்று ஒரு சொலவடை உண்டு. நீ இங்கு பேனை விஷயமாக வைத்து ஒரு பதிவை எழுதிவிட்டாய்! பேனைப் பதிவாக்கிய கண்மணி வாழ்க!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்