முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொருக்காச்சி!

காலையில் ஆறு மணி இருக்கும், நல்ல வெளிச்சம். வழக்கத்தை விட வெரசாகவே விடிந்து இருந்தது. கோடை என்பதால் போல! காலையில் வாசல் தெளித்து, கோலம் இட்டுக் கொண்டு இருந்தாள் கமலம். குட்டி மஞ்சு அந்நேரமே எழுந்து காப்பி போடத் தொடங்கி இருந்தாள் அவளது கிச்சன் செட் உதவியோடு, வீட்டு வாசலில்! அழகாக அடுக்கி வைத்து இருந்தாள் அவளது சொப்புகளை; சின்னச் சின்னக் கிண்ணம், கரண்டி, கப் அன் சாசர், காஸ் அடுப்பு, சிலிண்டர், குட்டிக் கூடை, மிக்ஸி, ஆட்டு உரல், அம்மி, சின்னது பெரியது என எல்லா அளவிலும் பல பாத்திரங்கள், தோசைக் கல், கரண்டி, இப்படி சகலமும் அவளிடம் இருந்தது! ஒவ்வொரு தடவை பொருக்காச்சிக்குப் (பொருட்காட்சி) போகும் போதும், அவள் குறைந்தது இரண்டு கிச்சன் செட்டாவது வாங்கிவிடுவாள், அப்படி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இப்போது அவளிடம் மூன்று கூட்டுக் குடும்பத்துக்கு சமைக்கும் அளவிற்கு பாத்திரம் இருந்தது. எல்லாவற்றிலும் நான்கு ஐந்து இருக்கும், காஸ் அடுப்பு மட்டும் மூன்று இருந்தது! குட்டி சைஸில் அவளிடம் டேபிள் ஃபேன் கூட இரண்டு இருந்தது!

மஞ்சு
”அம்மா அம்மா.. காப்பி இந்தாங்க... அப்பா.. உங்களுக்கு..., அவ்வா (பாட்டி) இது உனக்கு, தாத்தா.. இது உங்களுக்கு சீனி இல்லாம..”

எல்லோருக்கும் தனது கற்பனைக் காப்பியைக் கொடுத்து, மீண்டும் அந்த டம்ளர்களை வாங்கி கழுவத் தொடங்கி இருந்தாள்.

ஒரே மகள், செல்ல மகள் மஞ்சு. இப்போது, இரண்டாம் வகுப்பு கோடை விடுமுறை அவளுக்கு. அப்பாவுக்கு ஒரு கம்பெனியில் கணக்கெழுதும் வேலை. அம்மா இட்லி, வடை, தோசை என்று சுட்டுத் தருவாள், தாத்தா தெருவில் கூவி விற்றுவிட்டு வருவார். சில நேரம் மஞ்சுவும்  விடுமுறையின் போது சேர்ந்து கொள்வாள் தாத்தாவோடு வியாபாரத்தில், கூடவே நடந்து செல்வாள், கையில் ஒரு கூடையில் வடையும், அவளது பாப்பா பொம்மையயும் போட்டுக் கொண்டு. “ஏ மரிப்பூ கூடைக்குள்ள உக்காந்து வடைய திங்கக்கூடாது என்ன?” என்று அந்த பொம்மையை அதட்டிக் கொள்வாள். மரிப்பூ என்கிற பெயரை இந்த பொம்மைக்கு என்ன அர்த்தம் என்று கூடத் தெரியாமல் வைத்து இருந்தாள் மஞ்சு. காரணம், மஞ்சுவின் அத்தை மகள் அபி, இவளை விட ஐந்து வயது பெரியவள். ஒரு நாள், மஞ்சுவிற்கு இரண்டு வயது இருக்கும் போது, அபியும் மஞ்சுவும் பொம்மைகளைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்த போது, “ஏ, மஞ்சு, என்கிட்ட முந்தி ஒரு பாப்பா பொம்ம இருந்துச்சு, அது பின்க் கலர்ல கவுன் போட்டு இருக்கும், ரொம்ப அழகா இருக்கும், மரிப்பூ என்கூட நல்லா வெளயாடும், தெரியுமா?”, இப்படி அபி கண்கள் விரிய விரிய கை ஆட்டி ஆட்டிச் சொல்ல, மஞ்சுவின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது, மரிப்பூ பொம்மை தான் அழகு என்று. அடுத்து இவளுக்கு பொம்மை கிடைத்ததும், அதே பெயரை வைத்து விளையாடத் தொடங்கிவிட்டாள். உண்மையில், மரிக்கொழுந்து - மரிப்பூ, இப்படித் தான் அந்தப் பெயர் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

மரிப்பூ

ஒரே மகள் என்பதால், பெரும்பாலும் தனியாகத் தான் அவளது விளையாட்டு இருக்கும், யாருக்கு அவளைப் பற்றித் தெரியுமோ என்னவோ, அவள் மரிப்பூவுக்கு நன்றாகத் தெரியும். அதோடு தான் பேசிக் கொண்டே இருப்பாள். அது அவளுடைய பாப்பா, அவள் தான் அதுக்கு அம்மா. 
”அம்மா சொன்னா கேக்கனும், அம்மா கிட்ட வாடா.., தூங்கு தூங்கு.. அம்மா தட்டிக் குடுக்குறேன், என் செல்லம் கொஞ்சம் சாப்புடுமா.. ஐயோ ஒடம்பு என்னமா கொதிக்குது... அழாம ஸ்கூலுக்குப் போய் நல்லா படிச்சி பெரிய ஆளா வரனும்... மரிப்பூ பெருசாகி என்னவாகப் போறா?? சமத்தா இரு, குளிக்கிறப்போ ஆடுனா மூக்குல தண்ணி போய்டும், கண்ணுல சோப்பு பட்டுடும்...”
இப்படி அவளிடம் அவள் அம்மா சொல்லும் வசனங்களை எல்லாம் மஞ்சு அதே டோனில் அந்த மரிப்பூவிடம் சொல்லிக் கொண்டு இருப்பாள்.

மரிப்பூவோடு தான் எல்லா இடங்களுக்கும் செல்வாள். ”அதத் தூக்கிக்கிட்டே திரியாதடி”, இப்படி அம்மா எத்தனையோ முறை சலித்துக் கொண்டும், கோபித்துக் கொண்டும் சொல்லிப் பார்த்தாயிற்று, கேட்பதாக இல்லை மஞ்சு!

அன்றும் வழக்கம் போல விளையாடிக் கொண்டு இருந்தாள் வாசலில் தனது சொப்புக்களை வைத்து மரிப்பூவோடும் தாத்தாவோடும். அந்நேரம் பக்கத்து வீட்டு வனஸ்ரீ வந்தாள், “ஏ மஞ்சு.. இங்க பாத்தியா..”, என்று முந்தைய தினம் பொருக்காச்சியில் அவள் வாங்கிய பெரிய பொம்மையைக் காட்டினாள். வேகமாக மஞ்சு, “எங்க வாங்குன? பொருக்காச்சி வந்துருச்சா???”, என்று ஆசையாகக் கேட்டாள்.

“ஆமா, அது வந்து அஞ்சு நாள் ஆச்சி.. உனக்குத் தெரியாதா?? நான் ரெண்டு தடவ போயிட்டு வந்துட்டேன் தெரியுமா...”, பெருமையாகச் சொன்னாள் வனஸ்ரீ.

“நானும் போவேனே இன்னிக்கு, எங்கப்பா வந்ததும் சாயந்தரம்...”, இப்படி சிரித்துக் கொண்டே தன் கட்டை விரலை ஆட்டி ஆட்டி சொன்னாள் மஞ்சு. ஆனாலும், தனக்கு முன்பாக அவள் பொருக்காச்சிக்குப் போய் வந்தது இவளுக்கு ஒரே வருத்தம் தான். கோடை விடுமுறை என்றாலே மஞ்சுவிற்கு அந்தப் பொருக்காச்சி தான்! சொப்பு விற்கும் கடையைத் தேடித் தான் முதலில் செல்வாள், பிறகு, கம்மல், வளையல், பொட்டு, நக பாலிஸ் இப்படி, அடுத்து, டெல்லி அப்பளம் சாப்பிடுவாள். ஐஸ் க்ரீம், பஞ்சு மிட்டாய் எல்லாம் கேட்க ஆசையாக இருக்கும், ஆனால், அவளுக்கே தெரியும் அதெல்லாம் கேட்டால், ”இரவு நேரம் சாப்பிடக் கூடாது, உடம்புக்கு சேராது”, என்று அப்பா சொல்லிவிடுவார், அதனால், ஏக்கமாய் ஐஸ் கிரீம் திங்கும் குழந்தைகளைப் பார்த்துவிட்டு அமைதியாக வந்துவிடுவாள் அவளாகவே சமத்துப் பெண்ணாக.

எல்லா வருடமும் அவர்கள் ஊருக்கு பொருக்காச்சியோடு சேர்ந்து மழையும் வந்துவிடும். அது மஞ்சுவிற்குப் பிடிக்கவே பிடிக்காது. மழை பெய்யும் நாள் அவளை அப்பா பொருக்காச்சிக்குக் கூட்டியே போக மாட்டார்! ”அப்பா, மழ வராதுபா, போலாம்பா இன்னைக்கு...”, இப்படிக் கெஞ்சிக் கொஞ்சிக் கேட்டுப் பார்ப்பாள். ஆனால், மழை வருகிறது போல இருந்தாலே அவளை பொருக்காச்சிக்குக் கூட்டிப் போகமாட்டார்கள்.

அன்று சாயந்தரம் அப்பா வந்ததும் கேட்கலாம், பொருக்காச்சிக்குப் போகலாம் என்று மஞ்சு ஆவளாகக் காத்திருந்தாள். நான்கு மணிக்கே மழை மேகம் வந்து சற்று இருட்டியது போல இருந்தது, வாசலில் மஞ்சுவும் தாத்தாவும் விளையாடிக் கொண்டிருந்தார்கள் வழக்கம் போல, அவள் தாத்தாவுக்கு மாலை தேனீர் தயார் செய்து கொண்டு இருந்தாள், தாத்தா வெளியெ நின்ற சைக்கிளில் மரிப்பூவிற்குத் துண்டை வைத்து தொட்டில் கட்டி, தொட்டிலை ஆட்டிக் கொண்டு இருந்தார். மஞ்சு அருகே தேனீர் செய்து கொண்டே, ”ஆராரோ ஆரிராரோ... அத்த அடிச்சாரோ... அல்லிப் பூச்செண்டாலே...”, என்று தாலாட்டுப் பாடிக் கொண்டு இருந்தாள். திடீரென தாலாட்டை நிறுத்தி விட்டு, மஞ்சு தாத்தாவிடம், “தாத்தா, மணி ஆறு ஆகிடுச்சா..? இருட்டிருச்சுல, அப்பா ஏன் இன்னும் வரல??”

“இல்லடா, மணி நாலு தான் ஆகுது, மழ வராப்ல இருக்குது, பாரு, மேகம், கருப்பு மேகம், அதான் வெரசா இருட்டிருச்சி..”

அவள் முகம், மழை என்றதும், வாடிப் போனது. “அப்போ, அப்பா இன்னிக்கு பொருக்கச்சிக்குக் கூட்டிட்டு போக மாட்டாங்களா...”

சில்லென்றும், சர சரவென்றும் அப்போது வேகமாக காற்று அடித்தது. அவளுக்கு அவளின் வகுப்பில் சொன்னது ஞாபகம் வந்தது, காத்து அடிச்சா பெருசா மழ வராது, மேகம் எல்லாம் காத்து அடிக்கிற பக்கமா போயிடும்...

”மழ மேகம் காத்துல போகட்டும், பறந்து போகட்டும்... வேற ஊருக்குப் போகட்டும்... ரெயின் ரெயின் கோ அவே... கோ அவே...”, பாடினாள் மஞ்சு.

காற்று நின்றுவிட்டது!!! “அய்யோ.. நின்னு போச்சு காத்து... தாத்தா.. நீங்களும் சொல்லுங்க, “ரெயின் ரெயின் கோ அவே..”, தாத்தாவும் தப்பும் தவறுமாக, “ராயி ரயி, கோ அபே..” என்று அவளோடு பாடிக் கொண்டு இருந்தார்.

அவர்கள் பாடியதாலோ என்னவோ, இருட்டி இருந்தது, ஆனால், மழை வரவில்லை.

ஆறு மணிக்கு மேலே ஆகி இருந்தது, தாத்தா உள்ளே சென்றிருந்தார், மஞ்சு மட்டும் வாசலிலே அமர்ந்து வானத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

வீட்டில் யாரும் அவளை கவனிக்கவில்லை, அவள் தனியாக உட்கார்ந்து வானத்தையும் வாசலையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அன்று அப்பா வர கொஞ்சம் நேரம் ஆகி இருந்தது, லேட்! வந்ததும் அப்பா, “மஞ்சு...” அழைக்க, இவளை ஆளைக் காணோம்!

“ஏய்... மஞ்சு எங்க??”, கமலத்திடம் கேட்க, ”இங்க தான் வாசல்ல இருந்தா...”, தாத்தாவும் அம்மாவும் சேர்ந்து சொல்ல, மஞ்சுவைக் காணோம்!!!

வாசல்ல இல்லயே... பதறிப் போய் தேட ஆரம்பித்தார்கள். பக்கத்து வீட்டில், எதிர் வீட்டில், வீட்டச் சுற்றி... எங்கேயும் காணோம்!!!

மஞ்சு வீட்டை விட்டு வெளியே, சொல்லாமல் போகிற பெண் கிடையாது. அப்பா பயந்தே போனார்... வாசலில் நின்று, ”மஞ்சு... மஞ்சூ...” பயந்து போய் கத்திக் கத்திக் கூப்பிட்டுக் கொண்டு இருந்தார்...

மஞ்சு... மஞ்சுவைக் காணோம்... எதிர் வீட்டு வனஸ்ரீ, “மாமா, மஞ்சு மாடிக்குப் போனா... மொட்ட மாடிக்கு, நான் பாத்தேன், அப்போவே போனா.. இன்னும் என்ன பண்ணுறா அங்க போயி...”

வேகமாக மாடிக்கு ஓடினார் அப்பா. மஞ்சு ஒரு ஒரமாக மரிப்பூவோடு தூங்கிக் கொண்டு இருந்தாள் சுவரில் சாய்ந்தவாரே...

மஞ்சுவை எழுப்பி, கட்டிக் கொண்டு, “ஏன்டா குட்டி இங்க வந்து தூங்குன??”

அப்பா!
“இல்லப்பா, பொருக்காச்சிக்கு மழ வந்தா போக முடியாதுல, அதான், நானும் மரிப்பூவும் ரெயின் ரெயின் கோ அவே பாடிட்டு, ஸ்டார் இருக்கானு பாக்க வந்தோம்... நீங்க தான சொன்னிங்க போன வருஷம், வானத்துல ஸ்டார் வந்துட்டா மழ வராது, ஸ்டார் தெரிஞ்சா அப்பாக்குக் காட்டு, பொருக்கச்சிக்கு போலாம்னு, அதான், இன்னிக்கு மழ வராப்ல இருந்துச்சா, உங்களுக்கு ஸ்டார் காட்டி பொருக்காச்சிக்குப் போலாம்னு வந்தேன்... மரிப்பூக்கு தூக்கம் வந்துச்சா, அது என்னையும் கொஞ்ச நேரம் தூங்க சொல்லுச்சா... தூங்கிட்டேன்... ரொம்ப நேரம் ஆச்சா...??? நைட் ஆகிருச்சா..???”, வேகமாக வானத்தைப் பார்த்தாள், வானமெல்லாம் நட்சத்திரம்...

“அப்ப்பா.. அப்ப்பா... ஸ்டார் ஸ்டார்.. நெறைய ஸ்டார்... பொருக்காச்சிக்குப் போலாம்பா.. ப்ளீஸ்...”

பொருக்காட்சி!
அன்று அவளுக்கு இன்னொரு சொப்புச் சாமான் செட்டும், எப்போதும் இல்லாத அதிசயமாக அவளுக்கு ஐஸ்கிரீமும் கிடைத்தது. 

”அப்பா... சளிப் புடிக்காதா???...”, சிரித்துக் கொண்டே அவள் கேட்க, “சாப்டு, வீட்டுக்குப் போய் சுருக்தண்ணி (சுடு தண்ணி) குடிச்சா சளி வராது...”, முத்தம் இட்டார்.

“அப்படியா...”, என்று அவளுக்குக் கிடைத்த சொப்புக்களை கைக்குக் கீழ் இடுக்கிக் கொண்டு, ஐஸ்கிரீமை ரசித்துத் தின்றாள் மஞ்சு.

----------------------------------------------------------

"இத்தன நாளா எழுதவே இல்லையே? ஏன்? எழுதேன்?..", இப்படிக் கேட்ட அன்பு உள்ளங்களுக்கு எல்லாம், ”நன்றி நன்றி நன்றி..”

எழுதிட்டேன்பா, ரொம்ப மாசம் கழிச்சு ஒரு கதய!

Thank you so much for motivating me to write. Thank you :) 

கருத்துகள்

  1. மழலை உள்ளத்தைப் பற்றி
    அழகான கதை..!

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான கதை! பாத்திரங்கள் மனதோடு உறவாடுகின்றன! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா :) சின்னப் பிள்ளைகள் என்றால் எல்லோருக்குமே பிடிக்கும் தானே!

      நீக்கு
  3. நானும் யோசித்துக்கொண்டே இருந்தேன், கண்மணி ரொம்ப நாட்களாக உன்னைக் காணோமே என்று.
    மஞ்சு பொருக்காச்சிப் மகிழ்ந்தது போல நானும் உன் கதையைப் படித்து மகிழ்ந்தேன், பல நாட்களுக்குப் பிறகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம், கல்லூரி கடைசி செமஸ்டர் அது ஒரு காரணம் வராததற்கு. மிக்க நன்றி மா :)

      நீக்கு
  4. You made me remember my childhood.. i too had these kind of happy memories.. thanks and loving it ..

    பதிலளிநீக்கு
  5. எளிமையான கதை...நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் :) தமிழ் இதழ்களுக்கு சிறுகதை எழுத முயற்சிக்கலாமே? (ஒருவேளை இதுவரை செய்யாமல் இருந்திருந்தால்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி. நான் அனுப்பிப் பார்த்தேன், எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படவில்லை! :( என்ன செய்ய!

      நீக்கு
    2. Keep writing... You have the potential and with some practice, you will surely get published. All the best :)

      நீக்கு
  6. So cute !! கதை , மஞ்சு பேசும் கொஞ்சு மொழிகள் Fantastic :)

    பதிலளிநீக்கு
  7. Thanks for the insight of small gal world... U r realistically fantastic.. There are some traces of the great jayakanthan... Just my perspect...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்